Skip to main content

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

 மலையுச்சியிலும்



2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
   தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.
   அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”
    “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.
    தோமஸ் வந்ததும் கேட்டேன்.
    “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்.
    “இல்ல ஒங்களுக்குத் தூக்கம் பத்தாது. எங்களுக்கு பயாமா இருக்கு” என்றேன்.
    “ அப்படினா சிம்லாவுக்கு ஏற்ர மலையை அடைந்ததும். கார் ஒட்டுங்க. அங்க போலிஸ் தொல்லை இருக்காது” என்றார்.
    “ மலை அடிவாரத்தை அடைய எவ்ளோ நேரம் ஆகும்? என்று கேட்டேன்.
“அரை மணி நேரம்தான்” என்றார். அதுவரை இரண்டு முறை இறங்கி முகத்தை அலம்பிக்கொண்டார். தண்ணீரை அருந்தினார். சற்று நேரம் நடந்தார். உடலின் அத்தியாவசியத்தேவையான தூக்கத்தை ஜெயிக்க அவருடைய பகீரதப் பிரயத்தனங்கள் எதுவு கைக் கொடுக்காத போது ...... துப்பாக்கி முனையில் சரணடைந்தவராய்.....
“முடியல” என்றார். இருந்தாலும் காருக்குள் ஏறி மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார். முடியாது என்றாலும் வேலையைத்தொடர்வதுதனே கை நீட்டி சம்பளம் வாங்குபவனின் கட்டாயம்! அவர் நிலை பரிதாபமாக இருந்தது. எங்கள் நிலை ஆபத்தாக இருந்தது. அதற்குள் மலை அடிவாரத்தைத்தொட்டது கார்.
என் மருமகனிடம் காரை கொடுத்துவிட்டு ஹோட்டல் பேரைச்சொல்லி மூன்று நான்கு மணி நேரத்தில் ஒரு வளைவு வரும். அங்கே என்னை எழுப்புங்கள் என்றார். மருமகன் காரை எடுத்தார். எனக்குள் புதிய பயம் புகுந்து கொண்டது. வளைந்து வளைந்து செல்லும் பாதை. செல்லச் செல்ல இடது பக்கம் பள்ளத்தாக்கு சரிந்து தெரிந்தது. குறுகிய சாலை. எதிரில் கார் வந்தால் ஓசை எழுப்பினால்தான் தெரியும். சில இடங்களில் மிக நெரிசலான வளைவு. கரணம் தப்பினால் மரணம். பயத்தை நீக்க உபாயம் தேடினால் வேறு ஒரு உருவெடுத்து பயம் மீண்டும் ஆட்கொள்கிறது. தர்மமோ, மாயையோ, பயமோ, மகிழ்ச்சியோ “எதுவுமே நிரந்தரமில்லை” என்பது எத்தனைச் சத்தியமான வார்த்தை.
      ஒரு துணிச்சல் மட்டுமே. மருமகன் ஒரு தூக்கம் போட்டு களைப்பை நீக்கியிருந்தார் என்பதே. சிம்லாவைப்பற்றி நினைக்கும்போது அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய
புதிய வானம் புதிய பூமி எங்கும்
பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூ மழை பொழிகிறது..

       பாடல் சிம்லாவை நினைவூட்டிய வண்ணமிருந்தது. ஆனால் இந்த இரவையும் சாலையையும் கடக்கும் பயணம் அச்சத்தை ஊட்டியது . பரவாயில்லை நாளை காலையில் புதிய வானம்தான் புதிய பூமிதான் , என்ற உற்சாகம் பயண அச்சத்தைச் சற்று  குறைத்தது.
    
       இரவைக் கிழித்துக்கொண்டு கார் வளைந்து நெளிந்து சென்றது. மலை உச்சியை அடைய அடைய குளிர் உக்கிரமாகிக்கொண்டு வந்தது. காருக்குள் அது தெரியவில்லை. கார் கண்ணாடியைத் திறக்கும்போது முகத்தில் வந்து அறையும் காற்று சில்லிட்டு ஊடுருவுகிறது. தூங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் கண்ணாடியைத் திறந்தது என்று எரிச்சலுடன் முனகினர்.
       தோமஸ் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். சுற்றுலா நிறுவனங்களில் வேலை செய்பவரின் துயரம் முதலாளிகள் உணர்வதில்லை. விபத்து நேர்ந்துவிட்டால் அது வாகன் ஓட்டுனரால் வந்தது என்று முதலாளிகள் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம்.
      எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடிய வாகனம் இதோ இதோ என்று அதிகாலை 5.30 மணிக்கு ஹோட்டல் வாசலை அடைந்தது. இறங்கிப் பதிவு செய்து விட்டு சாவியை வாங்கி ரூமை அடைந்து வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தைப்போல படுக்கையில் விழுந்தேன். சற்று நேரத்தில் நான் இடுப்பில் கட்டியிருந்த பௌச் உருத்தியது. கழற்றிக்கடாசினேன். சப்பாத்து கனத்தது. கண்ணாடி. பெல்ட், காலுறை குளிர் கம்பலிச்சட்டை எல்லாவற்றையும் அரை தூக்கத்தில் படுத்த படியே கழற்றிக் கடாசியது களைப்பின் உச்சம். யாராவது இக்காட்சியைப் படம் எடுத்திருந்த்தால் எசகு    பிசகாய் ஆயிருக்கும்! இப்போது விடுதலை. அக்கடா என்று கண்ணை மூடினேன்.    

Comments

சுற்றுலா நிறுவனங்களில் வேலை செய்பவரின் துயரம் முதலாளிகள் உணர்வதில்லை. விபத்து நேர்ந்துவிட்டால் அது வாகன் ஓட்டுனரால் வந்தது என்று முதலாளிகள் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம்.

உண்மை, உண்மை
ko.punniavan said…
நன்றிங்க மைதீன்,
என் விருந்தினரானதற்கு நன்றி.

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...