Skip to main content

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

 மலையுச்சியிலும்



2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
   தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.
   அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”
    “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.
    தோமஸ் வந்ததும் கேட்டேன்.
    “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்.
    “இல்ல ஒங்களுக்குத் தூக்கம் பத்தாது. எங்களுக்கு பயாமா இருக்கு” என்றேன்.
    “ அப்படினா சிம்லாவுக்கு ஏற்ர மலையை அடைந்ததும். கார் ஒட்டுங்க. அங்க போலிஸ் தொல்லை இருக்காது” என்றார்.
    “ மலை அடிவாரத்தை அடைய எவ்ளோ நேரம் ஆகும்? என்று கேட்டேன்.
“அரை மணி நேரம்தான்” என்றார். அதுவரை இரண்டு முறை இறங்கி முகத்தை அலம்பிக்கொண்டார். தண்ணீரை அருந்தினார். சற்று நேரம் நடந்தார். உடலின் அத்தியாவசியத்தேவையான தூக்கத்தை ஜெயிக்க அவருடைய பகீரதப் பிரயத்தனங்கள் எதுவு கைக் கொடுக்காத போது ...... துப்பாக்கி முனையில் சரணடைந்தவராய்.....
“முடியல” என்றார். இருந்தாலும் காருக்குள் ஏறி மீண்டும் பயணிக்க ஆரம்பித்தார். முடியாது என்றாலும் வேலையைத்தொடர்வதுதனே கை நீட்டி சம்பளம் வாங்குபவனின் கட்டாயம்! அவர் நிலை பரிதாபமாக இருந்தது. எங்கள் நிலை ஆபத்தாக இருந்தது. அதற்குள் மலை அடிவாரத்தைத்தொட்டது கார்.
என் மருமகனிடம் காரை கொடுத்துவிட்டு ஹோட்டல் பேரைச்சொல்லி மூன்று நான்கு மணி நேரத்தில் ஒரு வளைவு வரும். அங்கே என்னை எழுப்புங்கள் என்றார். மருமகன் காரை எடுத்தார். எனக்குள் புதிய பயம் புகுந்து கொண்டது. வளைந்து வளைந்து செல்லும் பாதை. செல்லச் செல்ல இடது பக்கம் பள்ளத்தாக்கு சரிந்து தெரிந்தது. குறுகிய சாலை. எதிரில் கார் வந்தால் ஓசை எழுப்பினால்தான் தெரியும். சில இடங்களில் மிக நெரிசலான வளைவு. கரணம் தப்பினால் மரணம். பயத்தை நீக்க உபாயம் தேடினால் வேறு ஒரு உருவெடுத்து பயம் மீண்டும் ஆட்கொள்கிறது. தர்மமோ, மாயையோ, பயமோ, மகிழ்ச்சியோ “எதுவுமே நிரந்தரமில்லை” என்பது எத்தனைச் சத்தியமான வார்த்தை.
      ஒரு துணிச்சல் மட்டுமே. மருமகன் ஒரு தூக்கம் போட்டு களைப்பை நீக்கியிருந்தார் என்பதே. சிம்லாவைப்பற்றி நினைக்கும்போது அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய
புதிய வானம் புதிய பூமி எங்கும்
பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூ மழை பொழிகிறது..

       பாடல் சிம்லாவை நினைவூட்டிய வண்ணமிருந்தது. ஆனால் இந்த இரவையும் சாலையையும் கடக்கும் பயணம் அச்சத்தை ஊட்டியது . பரவாயில்லை நாளை காலையில் புதிய வானம்தான் புதிய பூமிதான் , என்ற உற்சாகம் பயண அச்சத்தைச் சற்று  குறைத்தது.
    
       இரவைக் கிழித்துக்கொண்டு கார் வளைந்து நெளிந்து சென்றது. மலை உச்சியை அடைய அடைய குளிர் உக்கிரமாகிக்கொண்டு வந்தது. காருக்குள் அது தெரியவில்லை. கார் கண்ணாடியைத் திறக்கும்போது முகத்தில் வந்து அறையும் காற்று சில்லிட்டு ஊடுருவுகிறது. தூங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் கண்ணாடியைத் திறந்தது என்று எரிச்சலுடன் முனகினர்.
       தோமஸ் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். சுற்றுலா நிறுவனங்களில் வேலை செய்பவரின் துயரம் முதலாளிகள் உணர்வதில்லை. விபத்து நேர்ந்துவிட்டால் அது வாகன் ஓட்டுனரால் வந்தது என்று முதலாளிகள் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம்.
      எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடிய வாகனம் இதோ இதோ என்று அதிகாலை 5.30 மணிக்கு ஹோட்டல் வாசலை அடைந்தது. இறங்கிப் பதிவு செய்து விட்டு சாவியை வாங்கி ரூமை அடைந்து வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தைப்போல படுக்கையில் விழுந்தேன். சற்று நேரத்தில் நான் இடுப்பில் கட்டியிருந்த பௌச் உருத்தியது. கழற்றிக்கடாசினேன். சப்பாத்து கனத்தது. கண்ணாடி. பெல்ட், காலுறை குளிர் கம்பலிச்சட்டை எல்லாவற்றையும் அரை தூக்கத்தில் படுத்த படியே கழற்றிக் கடாசியது களைப்பின் உச்சம். யாராவது இக்காட்சியைப் படம் எடுத்திருந்த்தால் எசகு    பிசகாய் ஆயிருக்கும்! இப்போது விடுதலை. அக்கடா என்று கண்ணை மூடினேன்.    

Comments

சுற்றுலா நிறுவனங்களில் வேலை செய்பவரின் துயரம் முதலாளிகள் உணர்வதில்லை. விபத்து நேர்ந்துவிட்டால் அது வாகன் ஓட்டுனரால் வந்தது என்று முதலாளிகள் பழியைப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இதுதான் முதலாளித்துவத்தின் உண்மை முகம்.

உண்மை, உண்மை
ko.punniavan said…
நன்றிங்க மைதீன்,
என் விருந்தினரானதற்கு நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின