Skip to main content

8.சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்



                                                 





                                                         கோடைகால அரண்மனை



                                                                 சூர்யா


ஒவ்வொரு நாள் காலையிலும் பத்து மணிக்கு மேல்தான் காலை உணவுக்கு தயாரானோம். "விடுமுறையில கூட சேவல் கூவுவற்துக்கு முன்ன எழுந்திருக்கணுமா?" ன்னு எனமமனைவி கேட்பாள்.
நாங்கள் சீனாவிலிருந்த ஒவ்வொரு நாளும் பெய்ஜிங்கின் மேரியட் விடுதியிலேயேதான் தங்கியிருந்தோம். பெய்ஜிங் சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்களையே ஒரு வாரத்திற்குப் பார்த்து முடியாது. எனவே முகாமிட்டது ஒரே இடத்தில்தான்.

அன்றைக்கு கோடைக்கால அரணமனைக்கு அழைத்துப் போவதாய்த் திட்டம். இதனை ஆங்கிலத்தில் summer palace   என்று சீனமொழியில்  pinyin  என்றும் அழைக்கிறார்கள்.

பெய்ஜிங்கின் பிரபலமான 'சுசுவான்' பாலத்துக்கு நேர் தெற்கில் இந்த பின்யின் அமைந்திருக்கிறது. 200 அடி உயரத்தில் குன்மிங் மலை உச்சியில் கோடை கால  அரண்மனையை அமைத்திருக்கிறார்கள். ஒரு மூன்று கிலோ மீட்டர் சுற்றளவைக்கொண்டது அதன் வளாகம். மலையின்  ஜின் ராஜ வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் பெய்ஜிங்கை தலை நகராமாக்கியபோது இந்த அரண்மனையை நிறுவி இருக்கிறார்கள். 1611 ல் கட்டுமான வேலையை தொடக்கப் பட்டிருக்கிறது. யுவான் டினாஸ்டியின் போது இதற்குத் தங்கக் குன்று என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். எல்லாம் குடி மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கட்டப் பட்டத்துதான். மிங் டினாஸ்டியோடுதான் இவர்கள் ஆதிக்கம் ஒரு  நிறைவை அடைந்திருக்கிறது. லிம் என்ற சாதாரண குடிமகன்தான் மக்கள் கொடுமைப்படுத்துவதை எதிர்த்து மன்னர்களின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அவரின் சிலை,  முன் கால்களைத் தூக்கிய குதிரை ஒன்றின் மேல் அமைக்கப் பட்டிருப்பதை இரு இடங்களில் பார்த்தோம். அவனின் பராக்கிரமத்தைப் பறைசாற்றும் சிலை இது. மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வர நிராயுதாபாணியான ஒரு  மக்கள் தலைவனே எங்கேயும் மக்கள் புரட்சியை முன்னெடுப்பது எழுச்சி வரலாறாகவே உலகம் முழுதும் அமைந்துவிட்டிருக்கிறது. சீனாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

அந்த மலையின் அடிவாரத்தில் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பெரிய குளம் ஒன்று விரிந்து பறந்து கிடக்கிறது. நாங்கள் போன நேரம் குளிர் காலமாகையால் அது முழுதுமாக உறைந்துகிடந்தது. அதில் செலுத்தப் பட்டு வந்த உல்லாசப் படகுகள் ஒரு ஓரமாய் இருத்தி வைக்கப் பட்டிருப்பதைப் படத்தில்  நீங்கள் காண்கிறீர்கள்.

 அங்கே குளிர் உச்சத்தில் இருந்தது. காரணம் அங்கே குளம் பனியில் கெட்டிதட்டிபோய்க் கிடப்பதால். படமெடுக்கக் கூட ஓரிடத்தில் நிற்க முடியவில்லை!  அங்கிருந்து வேன் நிற்குமிடம் சற்று குறைவான குளிர் பதிவாகும் இடம். நாங்கள் போன இடங்களிலேயே இந்தக் குளம் இருக்கும் இந்த அரண்மனை  வளாக இடத்தில்தான் குளிர் மென்னியைப் பிடித்தது. குழந்தைகள் குளத்தின் ஆபத்து அறியாமல் அங்குமிங்கும் ஓடியபடி இருந்தனர். என் மூன்று வயதுப் பேரன் சூர்யா அவன் அக்காள் அண்ணன் நிற்கும் குளத்தின் விளிம்புக்கு ஓடினான். அங்கே தரையில் உறைந்து கிடந்த பனி  வெயில் பட்டதும் உருக ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு அடியையும் கவனமாக  வைக்கவில்லை என்றால் வழுக்கி விழ நேரிடும். இவன் ஓடிய இடம் அந்தக் குளத்தின் ஓரத்தில். கொஞ்சம் சறுக்கினாலும் நேராகக் குளத்தில்தான் போய் விழ வேண்டியதுதான். நில்லு நில்லு என்றால் கேட்கிற வயதா அது! மேலும்வேகமாக ஒடினான். அவன் வழுக்கி விழுவதற்கு முன் ஓடிப் பிடிக்க வேன்டியதாயிற்று.

பார்க்க ரம்மியமான இடம் இந்த பின்யின் கோடைகால அரண்மனை. மிக நேர்த்தியாகவும் கவனமாகவும் பராமரிக்கப் பட்டு வருகிறது. ஆனால் அரன்மனைக்கு உள்ளே போக யாருக்கும் அனுமதியில்லை. மனிதத் தொடுதலால் அது சிதலமாகிவிடும் என அஞ்சுகிறார்கள்.  மாளிகை கட்டிய மன்னர்கள் மண்ணின் மடியில்.மாளிகையோ மண்ணின் மேல். இதாண்டப்பா வாழ்க்கை!

திரும்பும் போது பெய்ஜிங்கை வகிடெடுத்து ஒரு நீண்ட அழகிய ஆறு ஓடுகிறது. இதுவும் மனிதர்களால் உருவாக்கப் பட்டதுதான்.கோடை காலத்தில் அதில் டிரேகன் படகு விடுவார்களாம் . இரவில் அது ரதம் போல ஊர்ந்து செல்வதை பார்ப்பது சொர்க்கத்தைக் கண்ணில் கண்டதுபோல இருக்குமாம். அது மன்னர்களுக்காகத் தயார் செய்யப்பட்ட உல்லாசப் படகின் மறு உருவாக்கம்.. என்னமாய் அனுபவித்திருக்கிறார்கள் இந்த மன்னர்கள்!

மைக்கல் எங்கள் வழிகாட்டி வேனில அடிக்கும் தம்பட்டம்தான் சில சமயங்களில் தாஙக் முடியவில்லை! சீனப் பாடலொன்றைப் போட்டு அதைக் கேட்க வற்புறுத்துவார். தன் அப்பா ஒரு வயலின் போல உள்ள மூங்கிலாலான  இசைக்கருவியை வாசிப்பதைப் போட்டு கேட்கச் சொல்வார். சீனப் பாடகரைப் பற்றி பெருமையடிப்பார். குங் பூ பற்றி புகழ் பாடுவான். தன் நாடு ஒலிம்பிக்கை மற்ற நாடுகளைவிட சிறப்பாய் நடத்தியது என்று வேனில் பயணம் செய்யும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஆனாலும் அவனுடைய தேசப் பற்றையும் மொழிப்பற்றையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாதுதான்!

Comments

அரண்மனையின் புகைப்படத்தை இன்னும் கூடுதலாகக் காட்டியிருக்கலாம்,மிக அருகில் உள்ள படங்களைக் காணோம்.. தூரமாக, மலேசியாவில் உள்ள சீனக்கோவில் போல்தான் இருக்கிறது. தொடருங்கள் ஆசானே. அற்புதம்.
ko.punniavan said…
விஜி.
இந்தக் கட்டுரையை வளர்த்தெடுக்க நீங்கள் கொடுக்கும் உற்சாக டோனிக்கை
உண்டு நெகிழ்கிறேன்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின