Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 7


ஜெயமோகனின் அடுத்த நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில்  மற்றுமொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி நடப்பதாய் இருந்து அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே  அது ரத்தாக்கப் பட்டிருந்தது. எனவே அன்றைய தினம் அவர்கள் மூவரையும் மலேசியக் காடு ஒன்றுக்குள் நுழைந்து இயற்கை தரும் சுகத்தில் அனுபவிக்க வைக்கலாம் என்ற எண்ணம் துளிர்ந்தது. காட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மூவருக்குள்ளும் எழுந்ததுகூட வியப்படையச் செய்யும் ஒன்றல்ல.

நாங்கள் ஊட்டி, ஏற்காடு இலக்கிய முகாமில் கலந்துகொண்டபோது  மாலை காலை வேளைகளில் ஊட்டி காட்டுக்குள் அவர்களோடு காலாற நடந்த இனிய நினைவுகளின் நீட்சியாகவே இதனைக் கருதினேன். மலேசியா அசுர மேம்பாட்டு வேகத்தில் காட்டு நிலங்களை அழித்து ஆயிரக் கணக்கில் வீடுகளையும், சில புதுப்பட்டணங்களையும், விமான நிலையங்களையும் நிறுவிய படியே இருக்கிறது. புத்ரா ஜாயா என்ற புதிய அரசாங்க இலாகாக்களின் பட்டணமாக எழுந்து நிற்கும் இடம் முன்னர் ரப்பர் தோட்டமும் காடும் நிறைந்த இடமாகும். கோடிக்கணக்கான பணம் கொட்டி நிறுவப்பட்ட ஊர். அது இன்றைக்கு தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு சினிமாவுக்குக் பின்புலக் காட்சிக்கு கைகொடுத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த சந்ததிக்கு விட்டு வைக்காமல் காட்டைச்சூறையாடி கட்டங்களை நிறுவி  இயற்கை அன்னையை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

இயற்கை வளங்கள் இங்கே இருப்பதுபற்றி எங்கள் அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை . குறுகிய நாட்களிலேயே இதனைப் புரிந்துகொண்ட ஜெ  சூழியல் பற்றிய அக்கறை இல்லாத நாடு மலேசியா என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார். அதிலிருந்து காசு வருமா என்றுதான் பார்க்கிறார்கள் இங்கே. தன் பெயர் நிலைக்கவேண்டுமென்பதற்காகவே காடுகளைக் காவு கொடுத்தவர் எங்களுடைய மதிப்புமிகு முன்னால் பிரதமர் மஹாதிர். தான் செய்த அரசியல் பிழைகள்  பற்றிய எந்த  விதக் குற்ற மனபான்மையும் இல்லாதவர் அவர்.

காலையிலேயே ஜெவும் நண்பர்களும் தங்கி இருக்கும் ஆஸ்ரமத்துக்குச் சென்று அவர்களை காரிலேற்றிக் கொண்டு அருகாமையில் உள்ள மெங்குவாங் காட்டுக்குப் போனேன். ஆனால் அங்கே போய்ச்சேர்ந்தவுடன்  தான் தெரிந்தது அது மேம்மாட்டிற்காக 2015 வரை மூடப்பட்டுவிட்டது என்று.

அதனையடுத்த எனக்குத் தெரிந்த காடு ஜெராய். நெடுஞ்சாலையில் ஏறி ஒன்றரை மணி நேரத்துக்குப்பிறகு அந்தக்  மலையேறி காட்டுக்குள் நுழையலாம். கிருஷ்ணன் காட்டைப் பார்த்தாக வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார். இடையில் நின்று எரிபொருள் நிறைத்துக்கொண்டு , இரண்டு லிட்டர் தண்ணீர் புட்டி வாங்கிக்கொண்டு ஜெராய் காட்டுக்குள் நுழைந்தோம். ஆரேழு கிலோமீட்டர் வலைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைக்குள் நுழைந்து காட்டை அடையும் போது மணி நான்காகி விட்டிருந்தது.

அது பாதுகாக்கப்பட்ட ஒரு இடம். கிழக்கு மலேசியாவும் மேற்கு மலேசியாவும் ஒன்றையொன்று எட்டிப் பார்த்துக்கொள்ள அனுமதிக்காத நீண்டுகொண்டே இருக்கும் பலநூறு மைல்களுக்கு மலைத்தொடர். அதனை ஒரு சுற்றுலாத் தளமாக ஆக்கும் முயற்சியில் மாநில அரசு முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. அதிகமான குரங்குகளைப் பார்க்கமுடியவில்லை. காட்டில் கால் வைத்தது தொடங்கி காட்டிலிருந்து வெளியேறும் வரை ஒரே மாதிரியான காட்டுப்பறவையின் குரல் ஒன்று ஒலித்துக்கொண்டே இருந்தது.

காடு நாவலில் ஜே சொல்வார் காட்டுக்குள் நாம் நுழைந்தவுடன் அது நம்மை உள்ளிழுத்துக்கொண்டே இருக்கும் என்று. அதனை அங்கே உணர்ந்தேன். எல்லோரும் காட்டுக்குள் போய்க்கொண்டே இருந்தோம். மரங்கள். கொடிகள், பச்சை விதானம் நம்மை உடன்பிறப்பாகவே அணைத்துக்கொள்கிறது. சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் , இளங்காற்று , மெல்லிய ஸ்பரிசம் சதா எங்களை நிரப்பியபடியே இருந்தது. குதிக்கால் முதல் தலைக்குமேல் காடு சூழ்ந்துகொண்டது சுகமாக இருந்தது. சுகம் நிம்மதி நிறைவு தரும் காட்டின் வடிவில் கடவுள்



காடு என்றதும் ஜெயமோகனின் 'காடு' நாவல்தான் முதலில் நினைவுக்கு வரும். காட்டுக்குள்சென்றதும் அவர் நாவலில் எழுதிய சில வரிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டானது . காட்டில் அவர் உலவவிட்டிருந்த் நீலி ஒரு முக்கிய பாத்திரம். வாசகனைப் பின் தொடரும் ஒரு மாந்திரகப் பெண். நிழலாகவே உலவும் ஒரு பெண் கடவுள் போல.

எங்களுக்குப் பின்னால் நடந்து வந்த ஜெவைத் திரும்பிப் பார்த்தேன். அவர் விரல் ஒன்றில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

"என்ன ஜெ?" என்றேன். ஏதோ முள் குத்திவிட்டது என்றார்.

"இல்லை ஜே இது காடு நாவலில் வரும் நீலியின் வேலை " என்றேன். அவர் சிரித்தாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

காட்டிலிருந்து 6.00 மணிக்கெல்லாம் திரும்பினால்தான் ஆஸ்ரமத்தை அடைய முடியும். ஆஸ்ரமத்தில் அன்று குருபூஜை. ஜெ உரையாற்றுவதாய் இருந்தது.

காரில் திரும்பிக்கொண்டிருந்தபோதே சுவாமி அழைத்தார். குமரசாமி வீட்டில் தேநீர் விருந்து ஏற்பாடாகி இருக்கிறது.அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். எனக்கு இதனை முன்னாலேயே யாரும் சொல்லவில்லை. போய்ச்சேர மணி 7.30 ஆகிவிடும். இரவு உணவு நேரத்திலா டீ கொடுப்பது. எங்களூர் வழக்கமில்லை அது. நாங்கள் போய்ச்ச்சேர்ந்தபோது குமராசாமி காத்துக்கொண்டிருந்தார். டீக்கு பிய்கூன் (அசிங்கமாக நினைக்காதீர். எங்கள் ஊர்  சைனீஸ் நூடல்ஸ் அது. இடியப்பத்தைக் வெயிலில் உலரவைத்தால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும் அதன் தோற்றம். இதனை இடியப்பம் என்று சொல்லியே பரிமாறிவிடுவோம் அயலூர் காரர்களுக்கு.

ஆஸ்ரமத்தில் ஜெ தன்னுடைய இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். அவர் சந்தித்த மனிதர்கள், மகான்கள், சம வயது நண்பரகள், தான் ஒரு அச்சகத்தாருக்கு எழுதித் தள்ளி தந்த காம வரிசை நாவலகள், நித்ய சைய்தன்ய யதியை சதித்த தருணம் எல்லாவற்றையும் சொன்னார். நித்யா அவருடைய எழுத்துகள் பெரும்பாலானவற்றில் குறைந்தபட்சம் எங்கோ ஓரிடத்திலாவது எட்டிப்பார்ப்பார் நித்ய சைதன்ய யதி. தான் ஒரு சிறந்த படைப்பாளனாக வருவதற்கான வாய்ப்பே வாழ்வின் முக்தியாக இருக்கிறது என்று அடையாளம் கண்டு வழிகாட்டியவரே அவர்தான் என்று சொன்னார்தவரின் அரவணைப்பில் வளர்ந்தபோது ஏராலமான ஆன்மிக, தத்துவ, இலக்க்ய நூல்களைக் கற்றிந்திருக்கிறார்ஜெ. நித்யாவின் காலம் நெருங்கிவிட்ட வேலையில் தனக்கான கல்லறையை தன் மேற்பார்வையிலேயே நடந்தது என்று சொன்னார். நித்யா தன் இல்லாமையை எநத சலனமுமின்றியே  வரவேற்று நின்ற காட்சியை ஜெ சொல்லும்போது மரணத்துக்கு அஞ்சியே நம் வாழ்நாளை நகர்த்திக்கொண்டிருக்கும் அச்ச மனநிலை பற்றி நினைவுக்கு வந்தது.

நித்ய சைதன்ய யதி

ஜெ நித்யாவோடு இருந்த ஆண்டுகளில் தான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறி விடைபெறும் தருணங்களில்,  நித்யா கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் எப்போ வருவாய் என்று வாஞ்சையோடு கேட்கும் கேள்வியை தன்னால் எளிதில் மறக்கமுடியாது என்று சிலாகித்துச் சொன்னார் ஜெயமோகன். அன்றைய அவருடைய உரை தன் நெஞ்சின் ஆழத்திலுருந்த தன்னிச்சையாக வெளிப்பட்ட ஒரு நிதர்சனப் பகிர்வு.

மறு நாள் காலை பினாஙகு கொடிமலையில் இலக்கிய முகாம் தொடங்குகிறது. நாங்கள் ஆவலோடு விடியலை நோக்கிப் பார்த்திருந்தோம்.

(இந்தப் பதிவுல  எங்கய்யா குழப்பம்னு கேக்கரவங்களுக்கு... நீலி மலேசியக்காட்டுகள் நுழைந்தது குழப்பமன்றி வேறென்ன... ம்?)

தொடரும்.....
 

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த