Skip to main content

விசில் - சிறுகதை

                                               விசில்
           
                கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது.  அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை    ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன்.
 அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது.  கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள்  ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம்.  தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு  வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சலனமற்ற வெளி மேலும் பெரிதாக விரிந்து பரந்து இருக்கலாம்.
கால்கள் அதற்க ஒப்பவில்லை. கட்டில் சுகம். படுத்துறங்கிய சுகம் எஞ்சியிருந்தது உடலில். விட்டத்தை நோக்கிக் கண்களை மூடியபடி கால் கைகளை பரத்தி நீட்டி, பிராணயாமம் செய்தால் துக்கம் வரலாம். துண்டிக்கப்பட்ட தூக்கத்தை மீட்டுப் பிடிப்பது எப்போதும் நடந்ததில்லை. எண்ணங்கங்கள் ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து விழிப்பை மேலும் ஸ்திரப்படுத்துவிடுகிறது.
 மணி என்ன இருக்கும்? உத்தேசமாய் இரண்டைத் தாண்டியிருக்கலாம். கடிகாரத்தைப் பார்க்கவேண்டியதில்லை, உறக்கக்களைப்பை வைத்தே குத்துமதிப்பாய் நேரத்தை சொல்லிவிடமுடியும். சில நிமிடங்கள்தான் முன் பின் இருக்கலாம்.

அண்டை வீட்டார்  நாய்கள் சில சமயம் தன் காதுகளில் விழும் விநோத விசில்  ஒலியால்  குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. தான் சரியாகக் காவல் காக்கிறேன் என்ற பிரகடனத்தை அடுத்த உணவுக்கான  அச்சாரமாகவே எஜமானனிடம் பூடகமாகச் சொல்லும் அறிவிப்பு  அது. நாய்கள் அறிமுகமில்லாதவர்கள் வரவை நோக்கிக் குரைப்பது இப்போதெல்லாம் இல்லாமல் ஆகியிருக்கிறது. இந்த அகால வேளையின் விசில் சப்தமும்  பின்னாளில் அதற்குப் பழகிப் போகலாம்.
மீண்டும் விழிகள் ஒய்ந்து இமைகள் மூடும்  நேரத்தில் கிழவியின்  விஷில் சபதம்!, முன்னிலும் உரக்க ஊதும் முயற்சி! நோய்மையிலும், முதுமையிலும் மூச்சுக்காற்றில் சக்தி சன்னமாய்த் தேய்ந்திருக்கிறது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் தன் முழு பலத்தையும் பாவித்து ஊதுகிறாள். அப்போதும் மகனை அசைத்துவிடவில்லை.
விஷிலின் மீது நம்பிக்கையற்று ,“ஆ…...சாய்,’’ என்று குரலெழுப்புகிறாள். குரலின் ஊடாக வலியின் பிரதியை அனுப்பும் முயற்சி!. களைப்பில் தோய்ந்து மங்கிய குரல். அவன் எழுந்திருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் விஷில் ஒலி. அவன் அழைப்பைக் கேட்ட அறிகுறியைக் காணாது, மீண்டும் “ஆ….சாய்’ என்று விளிக்கிறாள். மாறி மாறி இரு வியூகங்களையும் கையாள்வதை அவள் கைவிடவில்லை. ஆ சாயின் மங்கிய காதுகளை இடைவிடாத அழைப்பு ஊடுருவி உசுப்பிவிடுகிறது.
ஊமை மகன் கோபத்தோடு கூச்சலிட ஆரம்பித்துவிடுறான்.
. ஆச்சாய் முழு ஊமையில்லை. குத்துமதிப்பாய் முப்பது விகிதமே கேட்கும். கேட்ட அளவுக்கு மட்டுமே வாயும் பேசுகிறது. அவனுடனான தொடர்பும் அவனுக்குப் பிறருடனான தொடர்பும் இந்த கேளாமையின் காரணமாக விலகல் ஏற்பட்டிருந்த்து.  அவன் ஊமையன் என்றே  அக்கம் பக்கத்தாருக்கு அறிமுகமாகி இருக்கிறான். அவனை வாய்விட்டு அழைத்தால் கேட்காது என்பதற்காகவே அவனின் அண்ணன் அம்மாவுக்கு விசில்  வாங்கிக்கொடுத்திருந்தான்.
        ஒலி தீட்டப்பட்டு, சீறிப் பாயும் அம்பு போல வரும் அழைப்பை, கடுமையாக எதிர்கொள்வான் ஆ சாய். அவனின் கண நேர நிம்மதிக்கு உலை வைக்கும் அவ்வொலி அவனுள் அடங்காத உக்கிர சினத்தைக் கிளர்த்திவிடும். கதவை அறைந்தபடி,பெருங்கூச்சல் போட்டுக் கொண்டே அம்மாவின் அறைக்குள் நுழைவான். கதவு சுவரில் மோதி  ஆடி அடங்கும். அவனின் கோபத்தில் கனன்று இரையும் சொற்களுக்குள் எங்களையும் எரிச்சலுக் குள்ளாக்கியது.
அவளை அருகில் நெருங்க அவன் குரல் ஓங்கும். அவளை நிமிர்த்தி உடகார வைக்கும் போதும்,. அவளை தூக்கி இடம் மாற்றும் போதும் வெறுப்பை உமிழும் சொற்கள். அவளின் நனைந்து சொதசொத்த படுக்கை விரிப்பை மாற்றும் போது அவளை அடிக்கும் சப்தம். அவளின் ‘பேம்பசை’ மாற்றும்போது வார்த்தைகள் சீறிக் குதறும்.  அவள் அடிக்கடி உணவு, தண்ணீர் கேட்டு ஓசை எழுப்பும் போது உண்டாகும் அவஸ்தையை அவன் அதிரக் கத்திய படியேதான் பணிவிடையைச் செய்யத் துங்குவான் . செய்து முடிக்கும் வரை தீச்சொல் ஓயாது. அவன் மொழி புரியவில்லை என்றாலும், அந்த அகால வேளையின் சூழலும், அதிர ஒலித்த குரலும், அதன் பொருளை தன்னிச்சையாகவே மொழியாக்கம் செய்துவிடுகிறது. பாவம்! வாழ்வில் உண்டாகும் நெருக்கடி மானுட வாஞ்சையை கொன்றே விடுகிறது
இவற்றை எல்லாவற்றையும் அவள் இயலாமையின் அழுகையால் நிரப்பிவிடுவாள். பெருங் குரலெடுத்த ஓலமும், விசும்பலும், புலம்பலும், எங்கள் அறைக்குள் நுழைந்து  நெடுநேரம் சூழ்ந்திருக்கும்.
அவளைக் காலன் காத்திருந்து உடன் கொண்டு போகவிருப்பது போன்ற அந்தகாரத்தில் அச்சக்குரல் அது. சம்பந்தப்படாத எங்களையும் இம்சைக்குள்ளாக்கும் . அதனை எப்படி எதிர்கொள்வது? அதனிலிருந்து எப்படி விடுபடுவது? மனதளவில் சம்பந்தப்படாமல் இருப்பது? என்பதற்கு எங்களிடம் எந்த யுக்தியும் இல்லை. ஒரு மௌனக் கோபத்தோடு அதனைக் கடந்து வந்துகொண்டிருந்தோம். அண்டை வீட்டருக்கு இவர்கள் சண்டையிடும் ஓசை தொந்தரவைத் தருமே என்ற கரிசனமே கடுகளவுகூட இருப்பதில்லை. நோயில் வீழ்ந்து துடிக்கும் தாய்க்கு இடைவிடாது பணிவிடை செய்யும் ஆ சாய் எங்களின் இருப்பை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
அவன் அம்மா  நிரந்தரமாக உடற் செயலிழந்து போனவள். அவளுக்குப் பணிவிடை செய்வதே வேலையற்று வீட்டில் முடங்கிப்போன மகனின் முக்கியப் பணி. அவள் அடிக்கடி ஊதும் விசில்  அவன் கோபத்தைத் திரண்டெழ செய்துகொண்டிருந்தது. இரவும் பகலும் ஓயாது ஒலிக்கச்செய்து சலனத்தை கொஞ்சமும் கரிசனமின்றி உடைத்தெறியும் அந்த அசுர ஒலி வேறென்னதான் செய்யும்? அவனைத் தூங்க விடாமல் விரட்டும் அந்தப் பேயொலி எவ்வகையில் அவனுக்கு நிம்மதியை உண்டாக்கும்? அவன் ஏங்கும் சுய விடுதலைக்கு எதிராளியாய் குறுக்கே நிற்கும் தாயின் இடைவிடாத தொல்லைகள், அவளின் மீது கரிசனப்பட வைக்குமா என்ன?  கால்களின் செயலிழப்பினால் அவனின் உல்லாசப் பொழுதுகளும் காவு கொடுக்கப்பட்டு, கூண்டுப் பறவியாய் நிரந்தரமாய் அடைபட்டுப் போனான்
.
அவனின் கோபம் நியாயத்தின் பக்கம்தான் இருக்கிறது என்றாலும் வீட்டுக்குள் இன்னொரு அசையாப் பொருள் போல முடங்கிப்போன தாயின் மீது கரிசனம் பிறக்கவே செய்கிறது நமக்கு. மனம் சமநிலைக்கு வந்தபோது அவள் மீதான பச்சாதாபம் பிறக்கிறது.
அவள் நடமாடிய காலத்தில்  அவள் கால்கள் சக்கரமாகி உருண்டன.
நண்பர்கள் வீட்டுக்குப் போய் மாஹ்ஜோங் (சீனர் சூதாட்டம்)விளையாடுவது, தன் இல்லத்திலும் நண்பர்களோடு சதா சூது ஆடித் திளைப்பது, காலையில் உடற்பயிற்சிக்குப் போவது, விருந்துக்குச் செல்வது, அவளே முன்னின்று ஏற்பாடு செய்வது , நடைப் பயிற்சிக்குப் போவது ,நண்பர்களோடு கரவோக்கேவுக்கு நடனம் ஆடுவது, என அவளின் இயக்கம் மாஹ் ஜோங் உருண்டு எழுப்பும் கல கல ஓசையைப் போல  ஓயாமல் நிகழ்ந்துகொண்டே இருந்தது.
மெல்லிய காற்று இதமாய் இழையாய் இழையாய்ப் புகுந்து களிப்பூட்டிய தருணம் பார்த்துதான், ஒரு குரூர சந்தர்ப்பத்தில் புயல்போல வந்த மாரடைப்பு அவளை வீழ்த்தி நிரந்தரமாய் கால்களின் நடனத்தை நிறுத்திவிட்டது. மாஹ்ஜோங் தாயக் கட்டைகளால் கலகலத்த வீடு காலம் ஆடிய  சூதாட்டத்தில் கலையிழக்கச் செய்திருந்தது.
 சக்கரமாக சுழன்ற அவளைச்,  சக்கரங்களே முழுதும் சுமந்து  இருக்கவேண்டிய துர்க்கனவாகிப் போனது.
அவளின் மூத்த மகன் இதனால் வீட்டில் தங்குவதில்லை.  அம்மா செயலிழந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்த போது அவளின் தொல்லை தொடங்கிவிட்டிருந்தது. இரவின் சலனமின்மை இல்லாமல் ஆனது.  நள்ளிரவிலும் பின்னிரவிலும் இடவிடாத ஒலி காலையில் சிவந்த கண்களோடு அவன் வேலைக்குச் செல்லவேண்டியதாயிற்று. எனவே    இரவில் நண்பர் வீடுதான் அவன் அடைக்களமாகும் இடம். எல்லாத் தொல்லைகளையும் சின்னவனான வாய்ப்பேசாதவனிடம் ஒப்படைத்து , வேலை முடிந்து பகலில்  மட்டும் முகம் காட்டிவிட்டு மறைந்துவிடுவான்..

அவனிடம் ஆச்சாயின் கருணையற்ற கூச்சலையும், துன்புறுத்தலையும், ஒரு மாலை வேளையில் அவனைச் சந்திக்க நேர்ந்தபோது சொன்னேன்.
“உங்க தம்பி நள்ளிரவு நேரத்தில் ரொம்ப கூச்சலிடுகிறான். தூக்கம் கெடுகிறது. கொஞ்சம் அவனிடம் சொல்லுங்கள்,” என்றேன்.

சற்றே அதிர்ச்சியுற்றவன்..   “அவன் மேல தப்பில்லை, அம்மாவின் தொல்லையைத் தாங்க முடியாமல்தான் அவன் சத்தம் போடுறான், என்ன செய்வது என்றே எனக்குப் புலனாகவில்லை. அம்மாவின் நிலைமை அப்படி!” என்றான். அவனும் உடனிருந்த செய்ய வேண்டியதை அவன் தம்பி மட்டுமே செய்கிறான் என்ற குற்றமனதின் பிரதிபலிப்பு அது.
தம்பி அவளை அடிப்பதுகூட அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.
அவள் இயக்கமற்று பெருக்கிக் கூட்டிய குப்பையாய் குமிந்து முடங்கிப் போனதிலிருந்து,   சிங்கப்பூர் உறவு துண்டித்துக்கொண்டது. பணம் வேண்டுமானால் தருகிறேன். அம்மாவை எங்கள் வீட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்று கைவிரித்து விட்டனர். பினாங்கிலுருந்து ஓய்வெடுக்க வரும் இன்னொரு பெண் பிள்ளையும் கைவிரித்துவிட்டாள். அம்மா என்ற தொப்புள்கொடி தொடர்புதான் அவள் நோயில் வீழ்ந்த பரிதாபத்தில் கொஞ்ச நாள் வைத்துப் பார்த்தாள். ஆனால் அம்மாவின் இடைவிடாத இம்சையால் அவளை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்ற ஆலோசனையோடு மீண்டும் தாயின் வீட்டுக்கே கொண்டு வந்து விட்டு விட்டாள்.
அம்மா சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே உடைந்து சிதறினாள். “என்னால் முடிஞ்சா நானே என்னப் பார்த்துக்க மாட்டேனா? என் கால்கள் இயங்கினால் நான் உங்களை நம்பியிருப்பேனா?” என்று முறையிட்டுச் செறுமினாள்.
உனப்போல எத்தனையோ பேர் முதியோர் இல்லத்தில் இருக்காங்க, கொன்ச நாள்ள பழகிப்போயிடும். போய் இரு" என்றான். அம்மா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் விசும்பல் அவனை அசைத்துவிடவில்லை. அவன் பிடிவாதமாய் இருந்தான்.
“என்னம்மா எல்லாருக்கும் குடும்பம் வேலைன்னு  இருக்கே! இதுல உன்னைப் பாத்துக்க முடியுமா. நீ போய் அங்க இரு, ஒரு ஆள் விட்டு ஒரு ஆள்  தெனைக்கும் உன்ன பாக்க வருவோம்.” என்றனர். பிள்ளைகள் அனைவரின் ஒருமித்த குரலின் வலிமையை எதிர்த்து அவள் மன்றாடல் எடுபடவில்லை.
அவள் விருப்பதுக்கு எதிராக முதியோர் இல்லத்தில் விடப்பட்டாள்.
அவளை விட்ட மூன்றே நாளில் முதியோர் இல்லத்திலிருந்து மகனுக்கு அழைப்பு வந்தது.
“உங்கம்மா இங்க இருக்கமாடேங்கிறாங்க. வீட்டுக்கே போனும்னு பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டோம். அவங்க கேக்குறதா இல்ல. சாப்பிட மாட்டேங்கிறாங்க. மருந்து எடுத்துக்க மாட்டேங்கிறாங்க . ஏதாவது ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு? தயவு செஞ்சி வந்து கூட்டிட்டு போய்டுங்க.”
வேறு வழியில்லை.  அந்தக் கதவும் மூடிக்கொண்டது. திறந்திருக்கும் கடைசி கதவு அவன் வீடுதான். பெரியவனுக்குக் கோபம் கனன்றது.

அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் தம்பிதான். தம்பி பெரும் எதிர்ப்புத் தெரிவித்தான். தன் பாதுகாப்புக்கு வந்த அம்மாவை அவனாலும் பார்த்துக்கொள்ள முடியவில்லை.
அடிக்கொருதரம் வரும் தாயின் அழைப்பு அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டது.
ஒருநாள் அவன் தாயின் இடையறா தொல்லையிலிருந்து  சுய விடுதலை வேண்டிக் காணாமற்போய்விட்டான்.
அம்மாவைப் பார்ப்பதா? ஓடிப்பனவனைத் தேடுவதா? வேலைக்குப் போவதா? என்ற மும்புறமும் மூண்டெரிந்த நெருப்பிலிருந்து  தப்பித்து வெளியே வர முடியவில்லை பெரியவனால்.
ஒருவகையாய் அங்குமிங்கும் அலைந்து அவனைத் தேடிக் கண்டுபிடித்தாயிற்று. “நான் வரேன், ஆனால் அவளை என்னால் பார்த்துக்க முடியாது,” என்று ஒரு நிபந்தனை விதித்தான்.
“சரி வா நான் ஏற்பாடு செய்கிறேன். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கொள், ஒரு வேலக்காரி தேடலாம்,”  என்று ஆசுவாசப் படுத்தி அவனை இணங்க வைத்தாயிற்று.
அவளைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் தேடுவது பெரும் சிரமமாயிற்று. அப்படியே கிடைத்தாலும் கொஞ்ச நாள் பார்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுப்போனவர்கள் கதை நீண்டுகொண்டே போனது.
சின்னவனின் தொல்லை அதிகமாயிற்று.” என்னால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது . நான் சொல்லாம கொள்ளாமல் எங்கியாவது ஓடிப் போயிடுவேன் . நாற்றம் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை, நான் ஓடிப்போய்டுவேன், ” என்ற பயமுறுத்திக்கொண்டே இருந்தான்.
அவனின் பழைய கண்மறைவு கலவரமூட்டியது பெரியவனுக்கு.
வேலைக்கு ஆள் தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் நிலைக்கவில்லை. சொந்த வீட்டில் தங்க முடியவில்லை. தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை.அவன் மனம் கலைந்து கலைந்து குழம்பியது. சிகிரெட்டை மாறி மாறி ஊதினான். நிலைகொள்ளாதவனாய் அங்குமிங்கும் நடந்தான்.
அவனால் இதற்கு ஒரு தீர்வை காணமுடியவில்லை . குழப்பமும் பதற்றமும் அவனை  அலைக்கழித்தது. தம்பி இல்லாத இரவு அவநை இம்சைக்குள்ளாக்கக்  காத்திருந்தது.

 நள்ளிரவுக்குப் பின் வழக்கமாகன விஷில் ஒலிக்கத் துவங்கியது. ஆ….சாய் என்ற அழைப்புக் குரல் அடுத்து கேட்டது. மீண்டும் விஷில் சப்தம். இம்முறை மேலும் உரக்க. தன் சக்திக்கு மீறிய ஒலி அது. அவள் சுவாசப்பை மூச்சுக்காற்றால் நிரப்பிக்கொள்ளாத  ஒலி. இன்னொருமுறை ஆ…சாய் என்றாள். தொடர்ந்து அழுகையும் விசும்பலும் இரவை கனக்கச்செய்தது.  தொய்வும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்த, விஷில் ஒலித்தது. அந்தக் கூர்மையான விஷில் ஒலி மௌன இரவை கலைத்து வியாபித்தது. ஒலி வியாபிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் தேய்மானத்தை உணர முடிந்தது..
அவளின் கேவல் ஒலி இருளை ஊடுருவி நிரப்பி நின்றது. ஊர் உறங்கும் நிசப்தத்தின் மோனத்தை அவள் அழுகை நாகம்போலச் சீண்டியது.
வழக்கத்துக்கு மாறாக, விஷிலின் ஓசையும், ‘ஆ ச்சாய்’ என்ற அழைப்பும் அந்த இரவில் நெடு நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது.


மறுநாள் காலை அவள் வீட்டிலிருந்து கேட்கும் மனிதக் குரல்கள்களால் வாாசற்படி  எட்டிப்  பாார்த்தேன் .     அவள் இறந் திருக்க்லலாம்   என்ற    என்    ஆரூடம் பொய்க்க வில்லை.
எஞ்சிய என்  இரவுகளில்  இல்லாமல் போன விசில் ஒலி என்னைத்  தொந்தரவு செய்தபடி இருந்தது.











Comments

ko.punniavan said…
ஏற்கெனவே படித்த கதை ஆனால் முடிவில் மாற்றம். எழுத்தாளரை ஏசாமல் இருக்க முடியவில்லை.பள்ளி விடுமுறையில் மகிழ்ச்சியாகத்தான் எழுத்தாளரின் வலைப்பதிவைத் திறந்தேன். 'விசில்' சிறுகதையின் முடிவில் அவர் மேல் பழைய கோபம் இருந்தது.இருந்தாலும் என்ன செய்வது .உண்மைதானே.பெற்றோரை கவனிக்காமல் தவறவிட்ட,தவறவிடும் மானுடனுக்கு இக்கதை ஒரு சூடு.இரண்டு மணி நேரம் தன்னம்பிக்கை பயிற்சிக்கு சென்று வந்தவன் பெறாத அனுபவத்தை ஒரு சிறுகதையில் பெற முடியும் என்பதற்கு விசில் ஓரு மாதிரியே.மன்னிக்கவும் தொடர்ந்து எழுத நேரமில்லை.போகவேண்டும்........என் அப்பாவைப் பார்த்து ஒரு வாரமாகிவிட்டது.

மருதா மீனாட்சி

June 23, 2017 at 12:06 AM Delete
ko.punniavan said…
நன்றி மருதா

உங்கள் வாசிப்புத் திறன் வியப்பளிக்கிறது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த