Skip to main content

பயணக் கட்டுரை 2 - இருபதும் எழுபதும்

2.  நயன்தாரா வந்தார்.

அரைநொடியில் அந்தப் பதற்றம் தீர்ந்தது.
நான் சொன்னேன்,
“ஹரி, குரல்வளையைக் கடிச்சு உறிஞ்சிடுவேன்” பதற்றம் முழுவதும் வற்றாமல் எஞ்சியிருந்த காரணத்தால்.
அவர் , “சார்...” என்றார் சிரித்துக்கொண்டே .
நல்லவேளை நான் தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்வதால் சைவமாக இருந்தேன். அதனால் ஹரி தப்பித்தார். நானும் கடித்துக் கொலை செய்த குற்றத்திற்காகச்சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பித்தேன். இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்.
பயணத்தின் முந்தைய நாளான 21-ஆம் திகதி, பினாங்கு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மகனது வீட்டிற்குச் சென்றுவிட்டேன். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். ஹரியும் நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் மகன் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தார். எனக்கு விடியற்காலை மூன்று மணிக்குத்தான் உறக்கம் தழுவுவது இயல்பாகிப் போனது. மூப்பின் காரணம். நோய்மையும் உற்ற தோழனானதும்தான். விடிய விடிய இலக்கியம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நேரம் ஆனதும் விமான நிலையம்  கிளம்பிவிட்டோம்.

வெகு நேரம் விழித்திருந்ததால், பசி எடுத்து விட்டது.  ஆதலால், விமான நிலையத்தில் உணவுக்காக அன
 லைந்தோம். அகால நேரத்தில் யார் கடையைத் திறந்து வைத்திருப்பார். “ மெக் டோனால்ட்” போன்ற என் நா, சுவை மறுக்கும் உணவு மையத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. ஆனாலும், புலி பசித்தும் புல்லை திண்ணுமா?
 சோதனைச் சாவடியைக் கடந்து உள்ளே சென்றவுடன்,  பசியும் இன்னும் உக்கிரமாகியது. கோலாலம்பூரைச் சென்றடைவதற்க்குள், வயிறு உணவுக்காக ஏங்கித் தவிக்கும் இக்கட்டான நிலை உண்டாகும். குளிர்பானத் தானியங்கியில் குளிர்பானத்தை தருவிக்க முடிவெடுத்தால், ஒற்றை ரிங்கிட்டுகள் கையில் இல்லை. 10 ரிங்கிட்டையும் ஏற்க மறுத்தது அந்தத் தானியங்கி. எனவே, விமான நிலைய பணியாளர் ( இஸ்லாமியர் ) 10 ரிங்கிட்டிற்குச் சில்லறை கேட்டால், அவனிடமும் இல்லை என்று தலையசைத்தான். என் முகத்தை பார்த்தவன், அவனிடமிருந்த 3 ஒற்றை நோட்டுகளை நான் மறத்தும் வலிய கொடுத்தான். கூடவே, “தப்பா, ஐ பினாஞ்சா யூ லா” – இது நான் விரும்பி வழங்கும் விருந்தாகட்டும் என்றான். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.

இல்லையென்றால் அடுத்து கோலாலம்பூர் விமான நிலையம் ஏறும் வரை எங்கும் உணவு வாங்க முடியாது. கோலாலம்பூர் விமானத்தைப் பிடிக்கவே நேரம் சரியாக இருந்திருக்கும். பொதுவாகவே, மலேசியர்கள்  பிற இனத்தின் மேல் கரிசனம் உள்ளவர்கள்தான். ஆனால், சுயநலமுள்ள அரசியல் தலைவர்கள் , நாற்காலி வெறியர்கள், இனவாதப் போக்கை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால், சிற்சில இடங்களில் வேண்டத்தகாதவை தலைகாட்டுகின்றன. இனங்களுக்கு இடையே பிரச்சனை வருவதை அரசியல்வாதிகள் விரும்புகின்றார்களா? தெரியவில்லை. மக்கள் பொதுவாகவே நல்லச் சிந்தனை உள்ளவர்களாக இருக்க அரசியல்வாதிகள் துர்ச்சிந்தனையைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள். கலங்கிய நீரை உண்டாக்கி, அதில் மீன்பிடிப்பவர்களாகி இருக்கின்றனர். கோலாலம்பூர் வந்தவுடன், திருச்சிக்கான விமானத்தை பிடித்தாயிற்று.

தமிழ் நாட்டிற்க்கான இந்தப் பயணம் தமிழைத் தேடியது மட்டுமல்ல, விஷ்ணுபுரம் விருது விழா, கீழடி அகழ்வாராய்ச்சி, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியன பிரதானமானவை.

திருச்சியில் வந்து இறங்கும்போது காலை மணி 9.45. குடிநுழைவுச் சாவடியைக் கடந்து வெளிவர காலை 10.45 இருக்கும். திருச்சி அப்போது இளவெயில் அடித்துக் கொண்டிருந்தது. இதமாக இருந்தது. இது வளர்ந்து முதிர்ந்த உச்சி நேரத்தில் கூட வெப்பம் அதிகமிருக்காது என்று தோன்றுகிறது. மழைக்காலம் முடிந்து இளவெயில் காலம் தொடங்கியிருந்தது. தமிழகப் பயணத்திற் சட்டகான சரியான நேரம் இதுவே என்று நினைக்கிறேன்.  திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வாடகை வண்டியின் வழி வந்து சேர்ந்தோம். ஒரு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காக, திருச்சியிலிருந்து  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்துவழி பயணப்பட்டோம். சராசரி மனிதர்களையும் அடித்தட்டு வர்கத்தினரையும்  சந்திக்கக்கூடிய வாய்ப்பு அங்குதான் கிடைக்கும். பயணநேரம் ஒன்றரை மணி நேரம். பேருந்தில் பக்கத்து இருக்கையில் வந்தமர்ந்தவர் ஒரு தீவிரமான இரஜினி இரசிகர் என்பது பேச்சு வாக்கில் தெரிந்தது. சரி. சுவாரஸ்யம் கூடட்டுமே என்று பேச்சைக் கொடுத்தோம். அவர் நம்ம தலைவர் என்றே அடைமொழியில் அழைத்தார் . நீங்கள் இரஜினி இரசிகராக இருப்பதில் உங்களது மனைவிக்கு ஆட்சியபனை இல்லையா என்று கேட்டேன்..  மனைவியும் இரஜினி இரசிகர் என்றும்  இவரதுக் குடும்பமே ஓர் இரஜினி குடும்பம் என்றார். வலிமையான கட்சிகள் அரசியல் களத்தை நிரப்பியிருப்பதால், அரசியலில் இரஜினி பேர் போட இயலுமா என்று கேட்டேன். அவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவுக்கு, அவர்தான் அடுத்த முதல்வர் என்று சொன்னார். இரசிகர் ஆதரவை அவர் மக்கள் ஆதரவு என்று  தவறாகப் புரிந்திருக்கிறார். சினிமாவையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாத பெரும்பாலான மக்கள் கூட்டத்தில் இவர் ஓர் உதாரணம். அவர்தான்சார் அடுத்த முதல்வர்.  எம்.ஜி.ஆருக்கு எப்படி மக்கள் ஆதரவு இருந்ததோ, அதேபோலவே இவருக்கும் என்றார். எம்.ஜி.ஆர் அமைத்துக் கொண்ட மக்கள் ஆதரவைத் தேடும்  திரைக்காட்சிகள் தற்செயலாக இவருக்கும் அமைந்துவிட்டன.
நான் ஆட்டோ காரன்,
நாலும் தெரிஞ்ச வூட்டுக்காரன்,
காந்தி பொறந்த நாட்டுக்காரன்,
கம்பெடுத்தா வேட்டைக்காரன்.
இது போன்ற எண்ணற்ற எழுச்சிப் பாடல்கள் ரஜினியின் செல்வாக்கை உச்சத்துக்குக்  கொண்டு சென்றவை.

அடித்தட்டு மக்களின்  இன்னல்களை கரிசனையோடு குரல் எழுப்பியவை.அவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்நோக்கும் வேதனைகளை இதுபோன்ற பாடல்களாலும் காட்சிகளாலும் தற்காலிகமாக மறந்து நிரந்தரமாக ரஜினியை ஆராதித்தனர்.எம்.ஜி.ஆரும் இதே சூத்திரத்தைதான் கையாண்டு மக்கள் மனதைக் கொள்ளை கொண்டார்.ஆனால் எம் ஜி ஆர் ஒரு  வலிமையான அரசியல் கட்சியின் பின்புலத்திலும், திரையை விட்டுத் தரையில் இறங்கி வந்தும் மக்கள் பணியாற்றினார். தான் சம்பாதித்தச் சொத்தை மக்களுக்கே திரும்ப தானம் செய்தார். பேருந்து காற்று வஞ்சனையில்லாமல் வீசிக்கொண்டிருந்தது. கூடவே, தூசும் முகத்தில் அப்பியது. அவர் சொன்னார், “நம்ம தலைவர் அரசியலுக்கு வந்தா, ஆட்சிய பிடித்துவிடுவார்' என்று. ஆமாம், அதற்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். மிகத்தீவிரமான இரஜினி இரசிகர்களால் அசம்பாவிதம் ஏதும் எங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். இப்படி பலமான அரசியல் பேச்சு நடந்துகொண்டிருந்த நேரத்தில்  செங்கிப்பட்டி நிறுத்தத்தில்  வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்த ஆடவர் உவர்ஒருவர் ஏறினார். கேலிக்கைக்காக, அந்த இரஜினி இரசிகரிடம் அநேகமாக, இவர் ஏதேனும் கட்சி கூட்டத்திலிருந்துதான் வந்திருக்கனும் என்றேன். சொன்னதுபோலே, அவர் அங்கிருந்துதான் வந்திருக்கிறார். அணிந்திருந்த வேட்டியின் கரை நிறம் தி.மு.க கட்சியென்பதை உறுதிபடுத்தியது. திமுக கட்சி பிறஸ்தாபங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார். இரஜினி இரசிகர் மூச்சைத் தவிற வேறு எதையும் விடவில்லை.  தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் முடிவாக, தி.மு.க -தான் வெல்லும் என்றார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், “நம்ம கட்சிதான் சார் ஆட்சியப் புடிக்கும்” என்று சொன்னார். “நம்ம தலைவர்”, “நம்ம கட்சி” என்ற சொற்றொடர்கள் எவ்வளவு போதையை ஏற்படுத்தியிருக்கின்றன.. சற்று நேரத்தில், இரஜினி இரசிகர் பேருந்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார். அவர் இறங்கியவுடன், வெள்ளை வேட்டிக்காரரிடம் வம்படியாக ஒரு கேள்வி கேட்டேன்.  “இரஜினி அரசியலில் ஜெயிப்பாரா?” . அதற்கு அவரின் பதில், “ அவன் கடக்கரான் லூசுப்பய”. தஞ்சாவூர் மத்திய பேருந்து நிறுத்தகம் வரவே, நாங்கள் இறங்கினோம்...  எங்களை வரவேற்க்க மருத்துவர் மிமி-யின் குடும்பத்தார் எதிர்பார்த்திருந்தனர். நயன்தாரா எங்கன்னு கேக்குறீங்களா? கட்டுரையில இருப்பாங்க பாருங்க.





நிகழும்...

Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...