Skip to main content

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான்



நேற்றைய தொடர்ச்சி........



தாய்மொழி- காலனித்துவம் சிந்திவிட்டுப்போன கசடுகள்



தாய் மொழி சார்ந்த உணர்வும் கவிதையின் பாடு பொருளாகப்பரிணமித்தது.மொழிக்கு ஊறு நிகழும்போது யார்தான் தட்டிக்கேட்பது? பின்னர் எதற்கு படைப்பாளன்?



உங்கள் சாய்ஸ்

சண்டே சமையல்

சன் டிவி

டாப் டென்

தமிழை இங்கே பிறர் கொல்கிறார்கள்

தமிழ் நாட்டில்

தமிழனே கொல்கிறான்



பிலீஸ் பிரதர்

லவ் டமில் (ஓவியன் - தலைநகர்)



தமிழ் நாட்டில் ஆங்கிலக் கலப்பு, ‘செம்புலப்பெயல் நீர் போல ஆங்கில மொழியும்தான் அழுத்தமாகக் கலந்ததுவே’ என்றாகிவிட்டது விட்டது.அதனைப்பிரித்து எடுத்து, ‘இந்தா - டெட்டோல் போட்டு கழுவிய தமிழ்,’ என்று கொடுப்பதென்பது கொக்குக்குக் கொம்பு முளைத்தால்தான் ஆயிற்று.கவிதையில் என்ன அங்கதம் பாருங்கள். ‘பிலீஸ் பிர்தர் லவ் டமில்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அவர்களுக்குப்புரியும் என்ற நிலை அங்கே! இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்?மலாய் ஆங்கிலம் தமிங்கலம் எல்லாம் கேட்கும் எங்கள் தனியார் டமில் வானொலியில். தமிழில் இருக்கிற கலப்பு போதாதென்று ‘புதிது புதிதான கலைச்சொற்களை’ சேர்ப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள் நம் ‘திமிங்கல’ தனியார் அறிவிப்பாளர்கள்.







பேரினவாதம் - ரத்தத்தோடு கசிந்து வரும் கவிதைகள்



கடலும் எல்லைக்கோடுகளும் ஒரு நாட்டின் இறையான்மையும் வரம்பை விதித்திருக்கவில்லையென்றால்,தூரதேசத்தில் நிகழ்த்தப்படும் அப்பாவித்தமிழனைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டியிருப்பான் கவிஞன்.இப்போதைக்குத் தன் கோபத்தைக்கட்டுப்படுத்த கவிதை கூடியபட்ச வடிகாலாக விடுகிறது.எழுதமுடிந்தவனுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.மனதில் துடித்துக்கொண்டிருக்கும் பீதி,குற்றவுணர்வு,அருவருப்பு, கழிவிரக்கம், கோபம், கசப்பு, போன்றவற்றை கவிதை வழியாக வெளியே அவனிடமிருந்து விடுபட்டு வெளியே வருகிறது. கஞனின் உக்கிரம் கவிதையில் குதிக்கிறது இப்படி,



இன்றில்லாவிட்டால்

ஒருநாள் பயப்படப்போகிறாய்

என்னைக்கண்டு

எழுதுகோலுக்குப்பதில்

கோடரியை ஏந்தும்போது

அலரி அலரி

துடிக்கப்போகிறாய்

உன் சதைகளைப்பிடுங்கும்

என் நகங்களைக்கண்டு

உன் குருதியை

கொட்டச்செய்து

படையலாக்கப்போகிறேன் (ப.ராமு- நயனம்)



பிஞ்சுகளை நச்சுக்குண்டு வீசிக்கொள்வதா

கடவுள் கண்ணை மூடிவிட்டாரென

நெற்றிக்கண்களைத்

திறந்துவிட்டார்கள்

அரசாளும் எமகாதகர்கள் (ஏ.எஸ்.பிரான்சிஸ்-நயனம்)

பேரினவாதம் செய்யுக் கொடுமை இளைப்பாறலுக்கு இடம் தராத பாலையாக நாடு மாறிவிடுவது மிகப்பெரிய கொடுமை.

இன்று காயங்கள் காயங்களாகக்

குருதியை மட்டும்

சுமந்தபடி......

எதையும் விட்டுச்செல்ல முடியாமல்

கொஞ்ச உயிர்கள்

இன்னும் எஞ்சி இருக்கின்றன

அந்த நாட்டில்

தன் உயிரை விதைத்தபடி.. (பூங்குழலி வீரன்- மௌனம்)



போர்க்காலத்தில் எதை விட்டுச்செல்வது?இனி இருக்கமுடியாது என்றானவுடன், பல காலம் குடியிருந்த வீட்டை விட்டுச்செல்லலாம், பழகிய நண்பர்களை விட்டுச்செல்லலாம்,சேமித்த பொருளை விட்டுச்செல்லலாம் மனச்சுமையோடு, எங்காவது பிழைப்பு நடத்தி இதையெல்லாம் திரும்ப வாங்கிக்கொள்ளலாம்தான், ஆனால் அதற்கு நாடு வேண்டுமே.சொந்த நாட்டைவிட்டு எங்கே செல்வது?

வேறு வழியில்லை எல்லாவற்றையும் பறிகொடுத்ததுபோல உயிரையும் பணையம் வைத்துவிடத்தான் வேண்டும் என்ற கையறு நிலையில்,பல முறை இறந்து இறந்து, உயிரோடு போராடும் அவலத்தை எழுதிச்செல்கிறது கவிதை.

தமிழன் பொம்மைகள்

எவன் கையிலும் ஆடும்

தன் முன் அழியும்

தனது இனம் கண்டு

பொம்மைகளால்

எதுவும் செய்துவிடமுடியாது

ஆட்டுங்கடா ஆட்டுங்கடா

இந்தத்தமிழ் பொம்மைகளை

எப்படி வேண்டுமானாலும்! (சை.பீர் முகம்மது- மௌனம்)

ஒரு பக்கம் தன் தாய்நாட்டைப்பாதுகாக்கப் போராளியாக மாறி உதிரம் சிந்தும் தமிழர்கள்.இன்னொரு பக்கம் தன்னைச்சுற்றி எதுவுமே நடவாததுபோலவும் எல்லாமே இயல்பாய்த்தான் நடப்பதாக பாசாங்கு செய்யும் மனிதன். இப்படி அக்கறையற்ற தமிழனை நக்கல் செய்கிறது கவிதை.



படிம உத்தியில் மரணம்



நாதன் கடைவாசலில் டீ குடிக்க

காத்திருக்கும் மூளை பிசகிய

இவனது பால்ய கால சிநேகிதன்

எல்லாமும் நேற்று

வாகனப்பாதங்களில் துவம்சமாகி

இரத்த பிண்டமாய்

இவனை அள்ளிப்போனதை..

காத்திருக்கும் காற்றுக்கும்

பறவைக்கும்

நாய்க்குட்டிக்கும்

ரோஜாவுக்கும்

பால்ய சிநேகிதனுக்கும்

இன்று யார் சொல்வது? (சீ.முத்துசாமி - மௌனம்)



திடீரென ஒருநாள் விபத்தில் இறந்துபோன ஒருவனை பெற்றோர்கள்,உறவினர்கள், நண்பர்கள் கண்ணீர் சிந்தி மறந்து விடலாம். அவன் இல்லையென்ற நிதர்சனத்தை உணர்ந்து அவனின் மரணத்தை கவலையோடு உள்வாங்கிக்கொள்ளலாம்.மகிழ்ச்சி கொள்வதும் கவலையடைவதும் மனிதமனத்தின் இயல்பான குணம். ஆனால், அவனுக்காகக் காத்திருக்கும் நாய்க்கும், பறவைக்கும்,காற்றுக்கும், ரோஜாவுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக,அவன் வாங்கித்தரும் டீயைக் குடிக்கக் காத்திருக்கும் மூளைபிசகிய இறந்தவனின் பால்யகால சிநேகிதனிடமும் எப்படிச்சொல்லி விளக்குவது இவன் மரணமுற்றதை?

கவிதையில் காட்சி அடுக்குகள் வண்ணத்துப்புச்சியின் சிறகென கண்முன் விரிகிறது. அந்தக்காட்சிகள் படிம நேர்த்திகொண்டு இயங்கி நமுக்குள் சோகத்தைக்கசியச்செய்து விடுகிறது. கடைசி வரியிலிருந்து இக்கவிதை மீண்டும் வாசகனுக்குள் பயணிக்கிறது சோக கீதத்தைப்பாடியவாறு.



கருமை- வெண்மையின் விதியை எழுதிவிடுமோ?



அடிமைச்சங்கிலியோடு ஆப்பிரிக்கக்காடுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட கருப்பர்களின் குரல் அமெரிக்காவில் உரக்க ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவை மட்டுமல்ல எட்டாத அதிசயமாய்,எட்டாவது அதிசயமாய் வியக்கவைத்தது ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாய் ஆனது.

புறக்கணிக்கப்பட்ட கருப்பும்

புறட்டிப்போட்டிருக்கிறது ஆட்சியை

கடல் கடந்து வந்தாலும்

எங்கள் கண்களை

உனக்கு வானமாக்குகிறோம்

எப்போதும்

நீ நிலவாய் காய்வதற்கு (கா.இலட்சுமணன் - தென்றல்)

ஒபாமா கருப்புத்தோளில் இருக்கும் வெள்ளைகாரன் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்ப்வையாளர்கள்.ஆமாம் அவர் உலக்கசட்டாம்பிள்ளை அமெரிக்காவின் அதிபர் என்பதை எப்படி மறுதலிப்பது? இருப்பினும், ஒபாமா நம்பிக்கை நட்சத்திரமாய் ஒளிர்ந்திருப்பது கருப்பு இனத்திற்கு ஆறுதலான விஷயம்தானே!



பெண்ணியம்- போராட்டத்தை நசுக்கும் வர்க்கம்



கோட்பாடு சார்ந்த இலக்கியம் இங்கே படைக்கப்படுவதில்லை என்ற குறைபாடு இருந்துவருகிறது.சாதிப்பிரிவினையோ, நிறப்பிரிகையோ, சாதி,சமூகச்சண்டையோ, பெண்ணடிமையோ,சுரண்டலோ, தனித்தனியே பாடுபொருளாக அடையாளம் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் கவிதைகளில் கோட்பாட்டுக்குரல் ஒரு ஓரமாய் இருந்து ஒலிப்பதுண்டு. அதிலும் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் இப்போது தன்னை தனியாகக்காட்டிக்கொள்ள விழைகிறது.இன்று முளைத்திருக்கும் புதிய கவிஞர்கள் பெண்ணடிமைத்தனத்தைப் பாட வருகிறார்கள் என்பது ஆரோக்கியமான வளர்ச்சி.



உன்னைத்தலையில் சூடினால்

பாவமென்கின்றனர்

ஆனால் உன்னைச்சூடாத

அந்தப்பெண் பாவமில்லையா? (கவிதா வீரபுத்திரன் காப்பார் - நயனம்)

பூவைப்பார்த்தா கேட்கிறார் கவிஞர்? பூவைச்சூட மறுக்கும் சமூகக்கோளாறுகளை நோக்கிய கரிசனக்குரல் இது.



கவிதை 1



மாங்கல்யம் நம் உறவின் சாசனம்!

சம்பிரதாயச் சங்கிலியால் அறுத்தெறிய முடியாமல்,

தினமும் எனக்குள் யுகவேதனை

சோகங்களில்

ஆழ்ந்து கிடக்கும் போதெல்லாம்,

உன் நெருப்பு வார்த்தைகளின்

சவுக்குச்சொடுக்கில்

பிடறி சிலிர்த்து

என் ரோஷக்குதிரை

விவாகரத்துப்பாதையில் ஓடினாலும்

மீண்டும் மீண்டும் பவித்திரமான்

உணர்வுடன்

ஒரு கூட்டுப்புழுவாய்

நம்பிக்கைக்குமிழுக்குள்

குறுகிவிடுகிறது.

உன்னைத்தொடர்வது

எனக்கு வலியாய் இருந்தாலும்

என் வழியாகிப்போனது!



பெண்ணடிமையின் மிக வலிமையான அடிமைச்சின்னம் மாங்கல்யம்.மூன்று முடிச்சுப்போடப்பட்டதால் அவள் பலரின் அடிமைச்சாசனத்தில் கையொப்பமிடவேண்டியுள்ளது.கணவனுக்கு,மாமியாருக்கு, கணவரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கு, அவள் மண வாழ்வுடன் கொஞ்சமும் சம்பந்தப்படாத இந்தச்சமூகத்துக்கு, அது விதித்துள்ள சம்பிரதாயங்களுக்கு, எனக்கணக்கில்லாமல் நீள்கிறது பட்டியல்.

இந்தப்பாழாய்ப்போன மாங்கல்யத்தால் என்னால் சுதந்திரமாகச் சுவாசிக்கமுடியவில்லை என் குமுறுகிறது ஒரு பெண் குரல்.விலங்கு கைகளிலும் கால்களிலும் மட்டுமே பூட்டப்படவேண்டுமா என்ன?



அன்பில்,அழகில்

பணிவில் பொருள் ஈட்டுவதில்

பட்டை தீட்டப்பட்டதுபோல்

முன்னூற்று அறுபது

கோணத்திலும்

பிசிறியடிக்கையில்

‘வைரம்” எனப் போற்றப்படுவாள்.....

பின்னொரு நாளில்

இது வெறும் ஒளிமிகுந்த கரியென’த்

திருத்தவும் படலாம் (மீராவாணி - மௌனம்)



கவிதையில் ஒலிக்கும் குரல் பெண் குரலாக ஒலிக்கிறது.இவள் உனக்குப்பொருத்தமானவள்.அழகு அன்பு குணம் எல்லாம் உண்டு.நல்ல வருமானம் பெறும் கல்வியும் உண்டு.குடும்மபத்தைக் கட்டிகாக்கவும் முடியும் என்று பாராட்டிய அதே வாய் பின்னொரு நாளில், ஏதோ ஒரு காரணத்தால் இவள் வேண்டாதவளாகி, ‘இவளை வைரமென்று நினைத்தேன்,ப்பூ வெறும் கரி என்று இப்போதுதான் தெரிகிறது,’ என்ற வார்த்தைகளால் அவளை ஊதி அணைத்துவிடவும் தயங்குவதில்லை.



குளித்த பின்னர்

கல்யாண சேலையணிந்த பின்னர்

பெரிதாய் ஒரு பொட்டு

வளையலென அலங்காரம் கொஞ்சம்

செய்து கொண்ட பின்னர்

ஏனென்று தெரிந்துகொள்ள விரும்பா

சடங்குகளுக்குப்பின்னர்

இறுதியாய் ஒரு முறை

பார்த்துக்கொண்டபின்னர்

அம்மாவின் பெட்டி மூடப்பட்டது.

.....................

கணம் ஒவ்வொன்றையும்

பொருள் ஒவ்வொன்றையும்

செயல் ஒவ்வொன்றையும்

சார்ந்த ஒவ்வொன்றையும்

அம்மாவின் சாமியின்

பாவநிழல்கள்

சதா துரத்திக்கொண்டிருக்கிறது

சொல்லிமாயாதினி...... (பா.அ.சிவம் - அநங்கம்)



அம்மாவைப்பற்றிய துர்கதை பால்ய வயது கொண்ட மகனைச் சதா துரத்திக்கொண்டே இருக்கிறது. அம்மா இறந்தபிறகு வீட்டில் அவன் காணும் ஒவ்வொன்றிலும் அவளின் இருப்பு பிம்பங்களாக காட்சி தருகிறது.அதுமட்டுமல்ல அம்மாவின் இறப்புக்குக்காரணியாக இருந்த அம்மாவின் சாமியின் (அப்பா)பாவ நிழல்களும் படிந்தவண்ணம் இருக்கிறது.

அம்மா இறந்து போன காட்சி, அம்மாவின் பெட்டி மூடப்பட்டது என்ற வரியில் மனதை கனக்கச்செய்கிறது.பிணத்தைக் குளிபாட்டியதிலிருந்து பெட்டியில் கிடத்தும் வரையிலான படிமம் மனதை என்னவோ செய்கிறது.அம்மாவைப்பற்றிய நினைவுகள்,அடுத்த கண்ணியில் உயிர் பெறும்போது அம்மாவின் சாமிமேல் நமக்கு கோபம் பீறிடுகிறது.ஒரு வாசகனின் அடி மனதில் பெரும் அசைவையும், பச்சாதாபத்தையும் கசியவைக்கும் இக்கவிதை காட்சிப்படுத்துதலில் மிகுந்த வெற்றிபெறுகிறது

தொடரும்...........

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த