Skip to main content

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் கன்னி முயற்சி



ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்
கன்னி முயற்சி



1. முதற் குழப்பம்


    2010  லேயே ஜெயமோகன் மலேசியா வந்திருந்தார். எங்கள் நவீன இலக்கியக் களம் அவரை வரவழைத்திருந்தது. குறிப்பாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி நவீன இலக்கியக் களத்தை முன்னெடுப்பவர். அவர்தான் அதில் மும்முரமாக இருந்தார். சுவாமி இலக்கியத்திலிருந்துதான் ஆன்மிகத்துக்குப் போனார். பின்னர் இலகியத்தையும் ஆன்மீகத்தையும் சமமாகவே அவதானிக்கத் தொடங்கினார். அவர் படிக்கும் காலத்தில் அவரை இலக்கியத்துக்கு இழுத்தது மு.வ தான். மு.வதான் அவரை மெல்ல ஆன்மீகத்துக்கு கொண்டு சென்றார். ஆன்மீகத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு இலக்கியத்தையும் நேசிக்கிறார் இப்போது. இரண்டும் வெவ்வேறல்ல . இரண்டுமே தத்துவ நோக்கோடுதான் வாழ்க்கையைப் பார்க்கின்றன என்ற நிதர்சனத்தை முன்வைப்பவர்.
 ஜெயமோகனின் எழுத்துகளை அவருக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். ஜொமோவின் அகப்பக்கத்தை திறந்து கொடுத்த நாள் முதல் இன்றைய தேதிவரை ஜொமோவை விடாமல் விரட்டிக் கொண்டு வாசிக்கிறார். அவரை உள்வாங்கிய பின்னர்தான் அவரின் ஆளுமையின் முழு தரிசனம் கிடைக்கப் பெற்றார். பின்னர்தான் ஜொமோ இங்கு வரவேண்டும் என்று முன்மொழிந்தவரே அவர்தான். 2010 ன் அவர் விட்டுப்போன அழுத்தமான அடையாளத்தின் பலனாகத்தான் மீண்டும் அவர் இங்கே வந்தார்.

16.3.2014 மாலை 4 மணிவாக்கில் ஏர் ஏசியா விமானம் மூலமாக கோலாலம்பூர் எல்சிசிடி விமான நிலையத்தை வந்தடைந்தார்.


அவருடன் கிருஷ்ணனும். ராஜமாணிக்கமும் வந்திருந்தார்கள். கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருடய தீவிர வாசகர்களாக ஆனவர்கள். நண்பர்கள் அரட்டை இல்லாமல் ஜெயமோகன்  இருக்க முடியாது என்பதை வைத்தே அவர் எவ்வளவு நட்பாகப் பழகக்கூடியவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இலக்கியம் ஆன்மீகம் சமூகவியல் என எல்லாத்துறையிலும் அவர் பிளந்து கட்டுவதை நம்முடைய திறமையோடு ஒப்பிடும்போது, நம்மை கொஞ்சம் எட்டியே இருக்கச் செய்கிறது அந்த பிரம்மாண்டம்.

16.3,14ல் ஜெமோ வந்திறங்கிய அன்று மாலை மணி 6 மணிக்கே அவர் உரையாற்றும் இலக்கிய நிகழ்ச்சி தொடங்கியிருந்தது. கோலாலம்பூரில் தீவிர கதியுடன் இயங்கும் வல்லினம் என்ற இலக்கிய குழுமம் அவரின் முதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. விமானம் அரை மணி தாமதித்து தரை இறங்கிய காரணத்தால் அரக்கப் பரக்கக் குளித்து நேராக நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவரோடு பேசலாமென்று காத்திருந்தேன். மணி 9.30 இருக்கும். நிகழ்ச்சி முடிந்து களைப்பாக இருப்பார்  இரவு உணவுக்குப் பின்னர் பேசலாம் என்றே தள்ளிப்போட்டேன். இந்த தள்ளிப்போடல்கூட என்னுள் உண்டாகியிருந்த  அச்சம்தான் காரணம்.

நான்தான் அவர் மலேசியாவில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நிரலை அனுப்பியிருந்தேன். அன்றே அதற்கு அவர் பதிலிறுத்தியிருந்தார்.

"கல்லூரிகளில் பேச எனக்கு விருப்பமில்லை. அவர்கள் வாசிக்கமாட்டார்கள் என்று ஆசிரியராக இருந்த உங்களுக்குத் தெரியாதா. கல்லூரி நிகழ்ச்சியை முடிந்தவரை குறைத்துவிடுங்கள்," என்றிருந்தது.

"நான் முயற்சி செய்கிறேன் ஜெ," என்று பதில் போட்டேனே ஒழிய. என்னால் பெரிதாக எதையும் மாற்றிட இயலவில்லை. கல்லூரிகள் நிகழ்ச்சிகளுக்கு முன்னரே ஏற்பாடு செய்துவிட்ட காரணத்தால் அவற்றை மாற்றிட முடியாத நிலை. மொத்தம் மூன்று கல்லூரிகள். ஒவ்வொன்றும் அவர்களின் மேலதிகாரிகளிடம் அனுமதி கேட்டு ஏற்பாடு செய்துவிட்டிருந்தமையால் ரத்து செய்வது கடினம் என்று சொல்லிவிட்டார்கள். சரி ஜெமோ மலேசியா வரட்டும். வந்துவுடன் சமாளித்துக் கொள்ளலாம் என்றே எண்ணியிருந்தேன். ஜெமோ இதுபற்றிக் கேட்பாரே என்ற தயக்கம்தான் என்னுள் அச்சத்தைக் கிளர்த்தியிருந்தது.

பேசலாமா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்ட நிலையில் இருந்தபோதுதான் சுவாமியிடமிருந்து வந்த ஒரு அழைப்பு என்னை அதிரச்செய்தது.

"புண்ணியவான் ஜெயமோகன் பயங்கர கோபத்தில் இருக்கிறாராம் , நவீன் சொன்னான்" என்றே என்னையும் நடுங்க வைத்தார்.
"என்ன சாமி என்ன நடந்துச்சு?" என்றேன்.
" அடுத்தடுத்து நிகழ்ச்சி ஏற்பாடாயிருக்கே,நான் எழுத்தாளன் மேடைப்பேச்சாளனல்லவே," என்று கோபப்பட்டாராம் என்றார்.
நான் எதற்காக அவரிடம் பேச அஞ்சினேனோ அது நடந்தே விட்டதே என்று மனம் அழுத்தத்துக்குள்ளானது.
"நீங்க அவருகிட்ட பேசுங்க.." என்றார். "நாளைக்கு மலேசிய எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துடுங்க," என்றார்.
"சாமி அது நடக்காது, ரெண்டு மூனு நாளா பத்திரிகையில் செய்தி போட்டுட்டு வராங்க....இப்ப போயி.." என்றேன்.
"நீங்க அவருகிட்ட பேசுங்க ..." என்று மீண்டும் அழுத்தினார்.
" சாமி நீங்களே பேசுங்க.. நீங்க சொன்னா கேப்பாரு," என்றேன்.
"இல்ல இல்ல நீங்க மொதல்ல பேசுங்க. நான் அடுத்து பேசுறேன்," என்றார்.
"சரி சாமி நான் பேசுறேன்" என்றேன். மனதில் துணிச்சல் வர மறுத்தது. சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு கைப்பேசியை எடுத்தேன்.

தொடரும்......


Comments

Very good start sir... நாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்திய ஆளுமைகளை ஆராதிக்க போகிறோம் சார். ஏதோ மனசுல தோனிச்சு...
ko.punniavan said…
நன்றி விக்கி,

நீங்களே ஆளுமை என்றுதானே அங்கீகரிக்கிறீர்கள். தமிழகம் எல்லாவற்றுக்கும் தாய்நிலம்.நாம் இன்னும் பின்னால்தான் இருக்கிறோம்.வழிகாட்டட்டும்.
ko.punniavan said…
நன்றி விக்கி,

நீங்களே ஆளுமை என்றுதானே அங்கீகரிக்கிறீர்கள். தமிழகம் எல்லாவற்றுக்கும் தாய்நிலம்.நாம் இன்னும் பின்னால்தான் இருக்கிறோம்.வழிகாட்டட்டும்.
உண்மைதான். ஆளுமைதான் அவர். அவர்களைப் படித்துவிட்டு, நமது இலக்கியங்களை வாசித்தால், உணவில் உப்பில்லாமல் சாப்பிட்டதைப்போன்ற உணர்வே மிஞ்சுகிறது. தரம் குறைத்து சொல்லவில்லை. தரம் உயர்ந்தால் என்னைப்போன்ற வாசகர்களுக்கு நன்றாக இருக்குமே என்கிற ஆதங்கம்தான்..
தொடருங்கள் சார்.வாசிப்போம். உங்களைப் பற்றியும் அவரின் ப்ளாக்கில் ஜெ.மோ எழுதியிருந்தார். உங்கள் வீட்டு கறிக்குழம்பு பிரமாதமாம்.! நல்ல நண்பர் என்றும் உங்களை பாராட்டியிருந்தார். மகிழ்ச்சி. :)
ko.punniavan said…
நன்றி விஜி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின