Skip to main content

பயணக் கட்டுரை 7 : இருபதும் எழுபதும்

7. இடைச்சிக்கல்லும் கரிகாலன் கல்லணையும்



மதுரையிலிருந்து திரும்ப தஞ்சைக்குக் கிளம்பும்போது இரவு சூழ்ந்துவிட்டது.நாங்கள் வாங்கிய புத்தகங்களை நியூ சென்ஞ்சுவரி புத்தகக் கடையில் திரும்பப் போய் எடுக்க எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம்.வடக்குத்  தெரு, கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, தெற்கு தெரு எதுவென கண்டுபிடிக்க முடியாமல் போன திசைக்கே மீண்டும் போய் இல்லை இது  இல்லை வேறு தெரு என்று மேலும் மேலும் குழப்பம்,மதுரை மீனாட்சி கண் பாரம்மா என்று வேண்டிக்கொள்ள கடைசியில் கண்டு பிடித்தோம். எத்தனை ஆயிரம் பேரைத்தான் மீனாட்சி சமாளிப்பாள். அவள் பல்லாயிரம் ரூபத்தில் வருவாள். அவளுக்கான டியூட்டியே எளிதாய் முடிந்துவிடுகிறது.

ஒரு வழியாகப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவுடன், கடைக்காரர்  ஒரு முதியவரைக் காட்டி இவரு யாரு தெரிதா? என்றார். பார்த்த மாதிரியும் இருந்தது பார்க்காத முகம் மாதிரியும் இருந்தது. நாங்கள் கொஞ்ச நேரம் விழிக்க இவருதான் திறனாய்வாளர் பேராசிரியர் தி சு நடராஜன் என்றார்.திறனாய்வுக்கலையைக் கற்கவேண்டி அவர் நூல் ஒன்றை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி வந்து வாசித்த நினைவு இருந்தது. அவரிடம் அதிகம் அளவலாவ முடியவில்லை. பேராசிரியர் வல்லபாய் மதுரையில் எங்கோ காத்திருக்கிறார்.   இரவு வேறு கருணையில்லாமல் கவிந்து கிடக்கிறது. தஞ்சைக்குப் போய்ச் சேர நான்கு ஐந்து மணிநேரமாகும். எனவே, அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டோம்.பேராசிரியர் வல்லபாய் எங்களுக்காக வெகுநேரம் பொறுமையாகக் காத்திருந்தார்.அவரை ஏற்றிக்கொண்டு தஞ்சைக்குக் காரை விட்டோம்.
இராஜ இராஜச் சோழனின் பெயர் பொறித்த கல்வெட்டு


மறுநாள் காலை மிமியின் கணவர்  சில இடங்களைக் காட்ட எங்களோடு இணைய சம்மதித்தது நான் நினைத்த சில இடங்களைப் பார்க்க ஏதுவாக இருந்தது. முதலில் தஞ்சை மண்ணின் பெருமிதம் தமிழரின் கட்டடச் சிற்பக் கலையின் முதன்மை அடையாளமான தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். இக்கோயிலை நான் பார்ப்பது பத்தாவது முறையாக இருக்கலாம்.ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போதெல்லாம் இக்கோயிலைப் பார்க்கவேண்டிய கட்டாயம் உண்டாகிவிடுகிறது.  முந்தைய பயணங்களில் நான் எதையோ பார்க்காமல் கருதாமல் விட்டுவிட்ட கோயிலின் கலையம்சங்கள் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. அதற்கு முன்னர் சரஸ்வதி மஹாலைப் பார்க்கலாம் என்ற எண்ணம் ஒரு பேராசிரியர் அங்கில்லாததால் பலனளிக்கவில்லை. ஆனாலும் அந்த வளாகத்தில் விற்ற மணலில் வறுத்த வேர்க் கடலையை வாங்கிக்கொண்டேன். தனிச் சுவையானது. மணலில் வறுத்ததாலா அந்த மண்ணில் விளைந்ததாலா என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதேபோல சுவையுடைய வேர்க் கடலையை தாய்வானிலிருந்து மகன் வாங்கிவந்திருந்தான் ஒருமுறை. எனக்கென்ன சந்தேகமென்றால் தஞ்சை வேர்க்கடலைதான் தாய்வானுக்கு அனுப்பப்பட்டு அழகான டின்னில் அடைக்கப்பட்டு புதுத்தோற்றத்தில்  ,  உலகம் முழுதும் விற்பனை ஆகிறதா தெரியவில்லை! தமிழகம் டின்னில் அடைத்து வர்த்தகம் செய்யும்  சூத்திரம் தெரிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. சீனர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் தமிழர்கள். குறிப்பாக வணிகத் தந்திரத்தில்!
தஞ்சை கோயிலில்
 போதிதர்மன் சிலை

தஞ்சை பெரிய கோயிலுக்கு, பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும் பெயர் உண்டு. தஞ்சை பெருவுடையார் கோயில் என்ற பெயராலும் இத்திருத்தலம் விளங்கி வருகிறது.ராஜ ராஜேஸ்வரன் கோயில் என்று கட்டியவன் பெயரிலும் அழைக்கப்படுகிறது. திருத்தலம் என்ற பெயரை மறைக்குமளவுக்கு இதன் சிற்பக்கலை உலகின் பொறியியலாளர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது.பின்னிப் பின்னி கற்களை அடுக்கியே அத்துணை உயரத்துக்கு ஏற்றி கும்பத்தை வைத்துள்ளனர்.பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ராச ராசனால் எழுப்பப்பட்ட இத்திருத்தலம் ஐக்கிய நாட்டுச் சபையின்  கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாராம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உலகத்தாரால் போற்றப்பட்டு வருகிறது. இதன் மிகப் பிரும்மாண்டமாக இருப்பது கோயில் கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்ட 80 டன் எடையுள்ள கல்லை நிறுவியது.இதற்கு இடைச்சிக்கல் என்று பெயரிட்டான் சோழ மன்னன்.ஒரு கிழவி அங்கு கட்டுமான வேலை செய்த ஊழியர்களுக்கு மோர் கொடுத்து வந்தாளாம். அவளின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அக்கல்லுக்கு இடைச்சிக்கல் என்று பெயரிட்டான். இந்த 80 டன் எடையுள்ள கல்லை எப்படி கோபுரத்தில் கொண்டுபோய் வைத்தான் என்பதை இன்றைக்குள்ள பொறியியலாளர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. இன்றைக்குள்ள தொழிநுட்பம் அன்றைக்கு இல்லை.கட்டடம் உயர எழுப்பியதும் உச்சிவரை மண்ணைக்கொட்டி யானைகளைக் கொண்டு மெல்ல மெல்ல இழுத்தோ தள்ளியோ 80 டன் ஒற்றைக் கல்லைக் கொண்டுபோய்ச் சேர்த்ததாக டாக்டர் ஜெயபாரதி என்னிடம் சொன்னார். ஆனால  கல்வெட்டு ஆய்வாலரும் தமிழ்ப் பண்டிதருமான முனைவர் மணிமாறனின் கருத்தின்படி இக்கல் ஆரஞ்சுச் சுலை போல பிளவுபட்டிருந்த கல் மேலே கொண்டு செல்லப்பட்டு  பின்னர் ஒரு கல்லாக ஒந்றைணைக்கப்பட்டுள்ளது என்கிறார்.(யாருக்கும் வேறு விளக்கம் இருந்தால் சொல்லுங்கள்) நினைத்துப் பார்க்கவே சிக்கலான செயலாக இருக்கிறது.


2010 ஆண்டோடு இந்தக் கோயிலை நிறுவி 1000 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. கலைஞர் ஆட்சியில் இந்த 1000த்தாவது ஆண்டை மிக விமரிசையாகக் கொண்டாட்டினார். கோயிலைச் சுற்றிப்பார்த்து முடிக்கமுடியாதுதான். அதற்கு ஆயிரம் கேள்விகளை வைத்துவிட்டுப் போயிருக்கிறான் சோழப் பேரரசன். இந்த நூற்றாண்டில் தொழில் நுட்பம் உச்சத்துக்கு வளர்ந்துள்ள காலக்கட்டத்தில் இந்தப் பிரும்மாண்டத்தைப் பார்த்து தலை சொறிந்துகொள்வது எவ்வளவு வெட்கக் கேடு?

கோயில் வளாகத்திலிருந்து வெளியானதும் டாக்டர் மிமியும் அவர் கணவரும் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
பசிக்கிறதா என்று கேட்டார் டாக்டர். செவிக்கு உணவில்லையேல் சற்று வயிற்றுக்கும் ஈயப்படும். செவிக்கு என்பதை கண்களுக்கு என்று மாற்றிக்கொள்ளலாம்.
உங்களை சுவையான மெஸ்ஸுக்கு கொண்டு போகிறேன் என்றார். காமாட்சி வாழைஇலை உணவகத்தில் போய் நிறுத்தினார். செல்ல மழைபெய்து ஓய்ந்த நேரம்.வயிற்றில் பசி சிட்டுக்குருவியாய் படபடத்தது. மெஸ்ஸுக்குள் உட்கார இடமில்லை. இளம் வாழை இலைகளையும் அதன் மீது வைக்கப்பட்ட உணவு வகைகளையும் பார்த்தபோது வயிற்றில் பருந்து முண்டியது.
எல்லாரும் ஒரே மேசையில் உட்கார இடமில்லையாததால் இருவர் இருவராய்ப் பிரிந்து பிரிந்து இடம் பிடிக்க வேண்டியதாயிற்று.முதலில் கொழுந்து இலை வைத்து நீர் தெளித்தார்கள். அப்போது தீ அணைந்தமாதிரி இருந்தது வயிற்றில்.என்ன வேண்டும் என்று கேட்க எதைக் கேட்பது எதை விடுவது. நெய்யூற்றிய கொதிக்கும் சோறும் கெட்டியான கறி வகைகளும் ஒன்றுக்கொன்று சுவையில் மிஞ்சி நின்றன.நான் இதுவரையில் தமிழக உணவகங்களில் சாப்பிட்ட கடைகளிலேயே இதற்குத்தான் அதிகபட்ச மதிப்பெண்கள் கொடுப்பேன்.

எப்படி உணவு என்று கேட்டார் டாக்டர்.
உணவின் சுவை நாவில் எஞ்சியிருக்க பேச்சு எப்படி வரும்?

அங்கிருந்து திருச்சியில் கரிகாலன் கல்லணைக்கு கார் ஓடியது. நான் பல முறை திருச்சிக்கு வந்து அதனைப் பார்க்க தருணம் எழவில்லை! இம்முறை அந்த  நீர் சொர்க்கம் கண்களுக்கு விருந்தளித்தது.
சிவப்புச் சட்டையில் டாக்டர் (மிமியின் கணவர்)

நிகழும்.....



Comments

Anonymous said…
Amazing
Unknown said…
ஐயா வணக்கம். கீழடி பயணக்கட்டுரை சிறப்பு. ஏற்கெனவே அங்கு சென்று வந்ததால் உங்கள் செய்திகள் அதனை நினைவு படுத்துவத்துவதாக அமைந்தது.ஆய்வுக்கு பல் வேறு இடையூறுகள் இருந்ததாக அன்றே கூறினர்.
தஞ்சைக் கோயிலின் பின்னே இருக்கும் கருவூரார் சித்தருக்கும் கோயிலுக்கும் தொடர்புண்டு. அச்செய்தி விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன். மகிழ்ச்சி. பயணம் தொடரட்டும்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த