Skip to main content

பயணக் கட்டுரை 9 : இருபதும் எழுபதும்

9. தமிழகப் பேருந்தில் ஓடிக்கொண்டே ஏறும் பயிற்சிப்பட்டறை


 திருச்சிக்குப் போகும் வழியில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தரிசனத்தை முடித்துவிடலாம் என்றார் ஹரி. நான் முன்பின் கேள்விப்பட்ட இடமில்லை. ஆனால் படைத்த பிரம்மாவைப் பார்த்துவிடலாம் என்றே பயணப்பட்டோம். இங்கு வழிபட்டால் 12 சிவ தலங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.பிரம்மன் உருவாக்கிய  பிரம்ம தீர்த்த  குளமும் , சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன.சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கிள்ளி  எறிந்த தளம் திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக்கொண்ட ஊர்தான் திருப்பட்டூர். அதனால் பிரம்மாவை வணங்கும்போதே சிவபெருமானையும் வணங்கும் பாக்கியம் பெறுகிறோம்.
பதஞ்சலி முனிவரின் சமாதியும் இந்த ஆலயத்தில் இருப்பதால், பொது மக்கள் திரண்டு வரும் ஸ்தலமாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. திருப்பட்டூர் ஆலயத்தைப் பற்றித் தேடும் போது அத்தலத்தைப் பற்றிய இத்தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
திருப்பட்டூர் ஆலய முகப்பில்

 டாக்டர் மிமியும் அவர் கணவரும் எங்களைக் அவர்கள் காரில் திருச்சிக்கு ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்தப் பயணத்தில் நாற்பது விகிதம் அவர்கள் பேருதவியாக இருந்தார்கள்.  எங்கள் பயணத் திட்டத்தின் முழுமையாக நிறைவேற்ற ஏதுவாய் இருந்தார்கள். நாங்கள் இங்கிருந்து திருவண்ணாமலைக்குப் போவதற்குப் பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமையில் அவதியுற வேண்டாமென்று தஞ்சையிலிருந்து திருச்சி ரயில்வே நிலையம் வரை கூட வந்து அனுப்பிவைத்தார்கள். விருந்தினரைக் கவனித்துக் கொள்வதிலும் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவர்களின் பங்கு மறக்கமுடியாதது.

திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்குப் போவதற்கு ரயில் டிக்கட் கிடைக்கவில்லை. மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு ஓடினோம். ஆட்டோ காரர்கள் நூறு ரூபாய் கேட்டார்கள்.தோ இருக்கிற எடத்துக்கு 100 ரூபாயா என்று சுணங்கினார் ஹரி. லக்கேஜ் இருக்கே சார் என்றார் ஆட்டோக்காரர். அவரை நிராகரித்துவிட்டு 20 மீட்டர் நடந்திருப்போம். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் குறிக்கிட்டார்.90 ரூபாய் என்றார். ஹரிக்கு அளப்பரிய இரக்கம் சுரந்து விட்டது. அவர் லட்சணமாய் இருந்தார். வாங்க சார் என்று ஏறிக்கொண்டார். பெண் ஓட்டுனர்  சார் ஆதரிக்க வேண்டும் என்றார். ஆமாம் நீங்கள் பெரிய பெண்ணியவாதிதான் என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

பேருந்து நிலையம் ரயில் நிலையம் போல சுத்தமாய் இல்லை.அங்கே இங்கே விசாரித்து ஒரு சாதாரண பயணப் பேருந்தில் ஏறிக்கொண்டோம். முறையான அறிவிப்பு இல்லை. திருவிழா நேரத்தில் நாதஸ்வர் மேளக்காரகளை  வரவேற்பது போன்ற அறிவிப்புகள்.

முக்கால் மணி நேரம் கழித்தே ஓட்டுனர் வந்தார். கடைசி இழுப்பை முடித்து புகையை ஊதிவிட்டு, ஓட்டுனர் சீட்டுக்குள் ஏறினார். நான் ஹரி கொறிப்பதற்கு வேர்க்கடலை வாங்கி வாயா என்றேன். போய் அரைக் கிலோ வாங்கிவந்துவிட்டார். இவ்வளவையும் யார் சாப்பிடுறது என்றேன். நான் இருக்கேன் என்று என்னைத் தைரிய மூட்டினார்.

பேருந்து புறப்பட்டது இரவு எட்டுக்கு. விடிகாலை 3க்குதான் போய்ச் சேரும். பேருந்தில் கண்டிப்பாய்த் தூங்க முடியாது. இது குளிர்சாதன வசதி உள்ளதல்ல. சரி விடுதியில் போய் தூங்கிக்கொள்ளலாம் என்று ஆசுவாசம் அடைந்தேன்.
பேருந்து புறப்பட்டதும் காற்று சீறிக்கொண்டு உள்ளே வந்தது. நான் மொட்டைபோட்டதன் நன்மையை அறிய வைத்தது பேருந்துக்குள் அறைந்து  மோதிய காற்று. மழைக்காலத்துக்குப் பின் வீசுவதால் சற்றே குளிராக இருந்தது.பேருந்து இடையில் மூன்று இடங்களில் நிறுத்தும் டீ குடிக்க. ஓரிடத்தில் நான் இறங்கினேன். துணை ஓட்டுனர் ரைட் என்றார். பேருந்து ஓட ஆரம்பித்துவிட்டது. ஏறுயா என்றார் .பேருந்து ஓடும் வேகத்தில் என்னால் ஏற முடியவில்லை. ஏறுயா ஏறுயா என்றார் அவசரப்படுத்தினார். ஓடிப்பிடித்து ஏறிவிட்டேன்.கொஞ்சம் தடுமாற்றத்தோடுதான். பேருந்தில் ஹரி தூங்கிக் கொண்டிருந்தார்.திருவண்ணாமலை போய் தூக்கம் கலைந்ததும்தான் என்னைத் தேடி, நான் காணாமல் திக்குமுக்காடியிருப்பார் . அதனால் என் பிரகிருதியின் வல்லமையைக் கொண்டு ஓடி ஏறிவிட்டேன். ஹரியின் தூக்கம் கலைந்ததும் சொன்னேன். இப்ப ஒன்னும் பேசாதீங்க நம்ம லக்கேஜ் பூத்ல இருக்கு என்றார் ஹரி. ரொம்ப உஷாரானவர்தான்.விடுதியிலும் புகார் சொல்லாதீர்கள் நம்ம பொருள் ரூம்ல இருக்கு என்பார்.

பேருந்தைவிட்டு  திருவண்ணாமலையில் இறங்கியதும் என் கோபத்தையெல்லாம் தீர்த்துக் கொண்டேன். உங்க ஊர்ல ஓடுற பஸ்ஸுலாதான் பயணிகளை ஏறச்சொல்லுவீங்களா.உங்க நிறுவனத்துக்கு புகார் தரவா? வயசாயிடுச்சின்னெல்லாம் கருத மாட்டீங்களா? வயித்துப் புள்ளத்தாச்சி பொண்ணையும் இப்படித்தான் ஏறச் சொல்லுவீங்களா?என்றேன் அவர் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை. ஒரு சுற்றுலாப் பயணி என்கிற முறையில் தமிழகப் பேருந்து நிறுவனங்கள் ஓடும் பஸ்ஸில் பயணிகள் துணிந்து ஏறும் பயிற்சி பட்டறையை நடத்தவேண்டுமாய்ப் பரிந்துரைக்கிறேன்.

திருவண்ணாமலையை அடைந்தவுடன் விடுதி தேட ஆரம்பித்தோம். சேவற்கோழிகள் கூவுவதற்குத் தயங்கும் அகால வேளை. முதல் விடுதி கையை விரித்தது. இரண்டாவது விடுதி ஐம்பது மீட்டர் தள்ளி இருந்தது. அதில் அறை இருந்தது.தூங்க வேண்டும் என்பதற்காக உடனடியாக ஒப்புக்கொண்டோம். ஆனால் அறையில் கரப்பான் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. நாங்கள் வந்ததைக்கூடப் பொருட்படுத்தாமல் அவ்வளவு விளையாட்டு. எஙகளைக் கண்டும் பயம் இல்லை. சுடுநீர் இல்லை.துண்டு இல்லை. சவர்க்காரமில்லை. தொலைபேசி அழைப்பைக்கூட யாரும் சீண்டவில்லை. பணத்தை வாங்கியதோடு பெரும்பாலான தமிழக பட்ஜட்(1200 ரூபாய்) விடுதிகள் கடமை முடித்து விடுகின்றன. இத்தனை நாள் மிமி இல்லத்திலும் பயணத்திலும் சுகமாய் இருந்துவிட்டு இங்கே வந்ததும்தான் அதற்கு எதிர்மறையான அனுபவத்தை எதிர்கொண்டோம்.


பயணக் களைப்பு தூங்கி டிப்பன் சாப்பிடச் சென்றோம். முதல் இரவு விடுதி போதாமைகளைக் கேட்டதற்கு அப்படியா சார் நைட் டியூட்டி இருந்தவரு போயிட்டாரே சார் என்றார். அந்தத் துணிச்சலில்தான் அழைப்பை நிராகரித்திருக்கிறார்.  அவரிடம் பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை.
நாங்கள் வந்த நோக்கம் அங்குள்ள மாணிக்கம் டாக்டரைப் பார்ப்பதாகும் . இரமண மகரிஷிக்கு வைத்தியம் பார்த்த அலமேலு அம்மாளின் புதல்வர். அவர் திருவண்ணாமலையில் குபேர லிங்க நகரில் இருந்தார்.குறிப்பாக ஹரி சில மருந்து வகைகளை அவரிடமிருந்து பெறவேண்டியிருந்தது. ஹரியின் அம்மாவின் முதுகுத்தண்டு பிரச்சனைக்கு ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சையை நிவாரணியாய்ச் சொல்ல, மாணிக்கம் டாக்டர்தான் ஆகார மருந்தளித்தும் சுயமாய்த் தயாரித்த தைலத்தின் வழியோடும் குணமாக்கினார்.
ஆதலால்,  டாக்டர் மாணிக்கத்தின் மீது ஹரி தீராத அன்புடையவராக இருந்தார். அவர் வைத்திய சாலைக்கு நடந்தே சென்றோம். அவர் வைத்திய மனையில் இருந்தார். அவரோடு சில பொழுது பேசிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றோம்.
டாக்டர்.மாணிக்கத்தோடு நானும் ஹரியும்
ஹரி, டாகடரின் மனைவி மனைவி, மகள், டாக்டர் மாணிக்கம், கட்டுரையாளர்
அவர் மனைவியும் மகளும் எதிர்கொண்டு வரவேற்றனர். நல்ல சுவையான சைவ உணவை அங்கே முடித்துக்கொண்டு அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். தோட்டத்துக்குப் போலாம் டாக்டர் தோட்டத்துக்குப் போலாம் டாக்டர்' என அவரை ஹரி பிடிவாதமாக அழைத்துக் கொண்டிருந்தார். ஹரி  ஓர் இயற்கை அழகின் ரசிகன். வாரத்துக்கு மும்முறையாவது மலை ஓட்டத்துக்கு கிளம்பி விடுவார். எனவே  பச்சை நிறத்தால்  அவர் எந்நேரமும் போர்த்தப்பட்டுக் கிடந்தார்.


நிலப்பரப்பெங்கும் பச்சை வயல். பொன்னிறத்தில் பூத்துக்கிடந்தன நெற்செடிகள்.
மண்ணிலிருந்து சடை சடையாய் சிறகுகள் ஆடிக்கொண்டிருந்தது போலக் காட்சி தந்தன நெற்கதிர்கள்.கதிர்கள் முற்றிவரும் தருணம். நாணத்தோடு தலைசாய்த்துக் கிடந்தன.காற்றின் இசைக்கு தாளம் தப்பாமல் தலையசைத்துக் கொண்டிருந்தன.
 அறுவடை முடிக்கும் முன்னரான அந்தப் பசுமையான காட்சி அழகிய பெண்ணாய் மனதைக் கொய்துவிடுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வானைத் தரிசித்த வண்ணமிருந்தன.தவமிருந்ததன் பலனாக இளநீரும் தேங்காய்களுமாய் ஈந்துவிட்டிருந்தன தென்னைகள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடர் மரங்கள் பச்சைகட்டியிருந்தன.வயல் வரப்புகளில் விதம் விதமாய் படம் எடுத்துக் கொண்டோம். விளைச்சல் என்ன அரிசி என்று கேட்டேன் டாக்டரை. இட்லி அரிசி என்றார்.

நான் சற்று நேரத்தில் எழுத்தாளர் பவா செல்லதுரைக்கு போன் செய்து நலம் விசாரித்தேன். வாங்க வாங்க இன்னிக்கி ஒரு நூலகம் திறக்கிறோம். வந்து கலந்துக்குங்க என்றார்.
எனக்கு அங்கு போக ஆசையாக இருந்தது. பவா தன் இல்லத்தையே இலக்கிய முகாமாகப் பாவித்துவருபவர். இதை முடித்துக்கொண்டு அங்குதான போகவேண்டும்......

                                                              நிகழும்....

Comments

Kalai said…
1. அவர் லட்சணமாய் இருந்தார்.
2. ஹரிக்கு அளப்பரிய இரக்கம் சுரந்து விட்டது!

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த